காதலித்து மணந்துகொண்ட நடிகை சமந்தாவும் நடிகர் நாகசைதன்யாவும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இருவரும் மணவிலக்கு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கணவரைவிட்டுப் பிரிவதாக அறிவிக்குமுன், சமூக ஊடகத்தில் இருந்த ‘சமந்தா அக்கினேனி’ என்றிருந்த தமது பெயரை ‘சமந்தா’ என்று அவர் மாற்றினார். அக்கினேனி என்பது நாகசைதன்யாவின் குடும்பப் பெயர்.
அதனைத் தொடர்ந்து, அப்போதே கணவன்-மனைவி இடையே உரசல் என்றும் விரைவில் அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் செய்திகள் வெளிவரத் தொடங்கின.
இந்நிலையில், இப்போது நடிகை பிரியங்கா சோப்ராவும், டுவிட்டர், இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் ‘பிரியங்கா சோப்ரா ஜோனஸ்’ என்றிருந்த தமது பெயரை இப்போது ‘பிரியங்கா’ என்று மாற்றியிருக்கிறார்.
அதாவது, தமது குடும்பப் பெயரான சோப்ராவையும் கணவரின் குடும்பப் பெயரான ஜோனசையும் அவர் நீக்கிவிட்டார்.
இதனால், கணவர் நிக் ஜோனசிடம் இருந்து பிரியங்கா பிரியப் போகிறார் எனத் தகவல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன.
ஆனால், “அதில் துளியும் உண்மையில்லை, எல்லாம் வதந்திகள்,” என்று அடியோடு மறுத்துள்ளார் பிரியங்காவின் தாயார் மது சோப்ரா.
அதேபோல, அண்மையில் நிக் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவிற்கு பிரியங்கா தெரிவித்துள்ள கருத்தும், அவர்கள் பிரிவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தம்மைவிடப் பத்து வயது குறைந்த அமெரிக்கப் பாடகரும் பாடலாசிரியருமான நிக் ஜோனசைக் கடந்த 2018ஆம் ஆண்டில் மணந்தார் இப்போது 39 வயதாகும் பிரியங்கா.