சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வருகிறது 'டான்'. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.
தலைப்பைக் கேட்டதும் குண்டர் கும்பலுக்கு இடையேயான மோதல், தெறிக்கும் துப்பாக்கித் தோட்டாக்கள், ரத்தச் சிதறல்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். இதற்கு நேர்மாறாகத்தான் எல்லாம் இருக்குமாம். அதாவது, சிவா இதில் 'செல்ல டான்' என்கிறார் இயக்குநர்.
"தமிழில் எல்லோரையும் கவரக்கூடிய வகையில் ஒரு ஜாலியான கல்லூரி கதைக்களத்தில் அமைந்த படம் வெளிவந்து நீண்ட காலமாகிவிட்டது.
"பொதுவாக, கல்லூரிப் படங்கள் நம்மை பழைய நினைவுகளுக்கு மீண்டும் அழைத்துச் செல்லும். அப்படி எல்லோருடைய மலரும் நினைவுகளைதூண்டிவிடும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.
"பொதுவாக எல்லா கல்லூரிகளிலுமே 'அராத்து' என்று சொல்லக்கூடிய வகையில் சிலர் இருப்பார்கள். அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கும்.
"எப்போதுமே உற்சாகமாக சிரித்துப் பேசி பிறரைக் கிண்டல் செய்வது இந்த அராத்துக் கும்பலின் வழக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்தான் நம்ம சிவா.
"கல்லூரி மாணவர் கதாபாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார். அவர் இப்படி ஒரு வேடத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. அதனால் இயல்பாகவே அவருக்குப் பிடித்துப்போனது.
"கல்லூரி மாணவராகத் தொடங்கி, அவரது முப்பதாவது வயது வரையிலான வாழ்க்கைதான் இந்த படத்தின் கதை," என்கிறார் சிபி சக்ரவர்த்தி.
'டான்' படத்தின் தயாரிப்பாளரும் சிவாதான். 'டாக்டர்' படத்தின் பெரும் வெற்றி காரணமாக அவரது அடுத்தடுத்த படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
எனவே, 'டான்' பட வியாபாரம் சிவாவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
"முந்தைய படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்ட பிறகும் அவர் அமைதியாகத்தான் வலம்வருகிறார். அறிமுக இயக்குநர் என்று சாதாரணமாக நினைக்காமல் எனக்கான அனைத்து வசதிகளையும் குறைவின்றிச் செய்து கொடுத்தார். ஒரு தயாரிப்பாளராகவும் முன்னணி கதாநாயகனாகவும் இருந்தும்கூட, எளிமையாக நடந்துகொள்வது பெரிய விஷயம்.
"இந்தப் படம் சிவாவின் நடிப்புக்காகவும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு குறிப்பிட்ட காட்சியை எடுக்க வேண்டிய நாள் நெருங்கியபோது, அவரிடம் அதுகுறித்து நினைவூட்டினேன். சற்று நீளமான அந்தக் காட்சியை ஒரே நாளில் படமாக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், திட்டமிட்டபடி எல்லாம் நடக்குமா எனும் தயக்கமும் பயமும் இருந்தது.
"மறுநாள் அந்தக் காட்சியைப் படமாக்கும் முன்பு எத்தனை 'டேக்'கானாலும் பரவாயில்லை சார் என்று மேலோட்டமாக கூறிவைத்தேன்.
"ஆனால், அந்தக் காட்சியை விவரிக்கச் சொல்லி கேட்டுக்கொண்ட பின்னர் அரை மணி நேரம் மௌனமாக இருந்தார். பிறகு காட்சி படமாக்கப்பட்டபோது ஒரே 'டேக்'கில் நடித்து முடித்தார்.
"ஒட்டுமொத்த படக்குழுவினரும் வியந்துபோனோம். நிச்சயமாக இந்த ஒரு காட்சி, அவர் 'மிகச் சிறந்த நடிகர்' என்பதை நிரூபிக்கும்," என்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.
இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ராதாரவி, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார் பிரியங்கா மோகன்.
"பிரியங்கா தமிழ் தெரிந்த நாயகி. தோற்றம் மட்டுமல்ல, அவரது நடிப்பும் அழகாக உள்ளது. நிச்சயமாக கோடம்பாக்கத்தில் ஒரு சுற்று வருவார் என நம்பலாம்.
"சிவாவுக்கும் அவருக்குமான உடல்மொழி கச்சிதமாக உள்ளது. இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்," என்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள படங்களில் 'டான்' படத்தின் வியாபாரம் புதிய உச்சத்தை தொடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதன் பின்னர் அவரது சம்பளமும் நிச்சயம் அதிகரிக்கும் என்பது இவர்களின் கணிப்பாக உள்ளது.
, :

