சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி உள்ளது 'சித்திரைச் செவ்வானம்'.
இயக்குநர் ஏ.எல்.விஜய் கதை எழுத, கோடம்பாக்கத்தின் முன்னணி சண்டைப் பயிற்சியாளரான சில்வா, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 3ஆம் தேதி இப்படம் 'ஓடிடி' தளத்தில் வெளியாகிறது. சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் என படத்தில் இரு நாயகிகள் உள்ளனர். இவர்களில் பூஜா கண்ணன் வேறு யாருமல்ல, நடிகை சாய் பல்லவியின் தங்கை.
இது சமூகத்திற்குத் தேவையான ஒரு படைப்பு என்றும் அனைவரும் குடும்பத்துடன் இதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார் சமுத்திரக்கனி.
"சில்வா திடீரென ஒருநாள் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். பிறகு நேரில் வந்து ஒரு கதையைச் சொன்னார். அவரிடம் இருந்து அப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை.
"ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான உறவை, அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் கதை அது. இருவரும் எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மனதை உருக்கும் கதையாக உருவாக்கி உள்ளார்.
"அதைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடமே படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டேன். இதுபோன்ற சிறந்த படைப்பில் நானும் இடம்பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் சமுத்திரக்கனி.
"தந்தை, மகள் கதாபாத்திரங்கள் முக்கியமானவை என்பதால் சமுத்திரக்கனியை முதலில் தேர்வு செய்தோம். பிறகு மகள் பாத்திரத்திற்கு சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சரியாக இருப்பார் என இயக்குநர் ஏ.எல்.விஜய் கூறினார். நானும் அதை ஆமோதித்தேன்.
"நாங்கள் எதிர்பார்த்தபடியே மிக நேர்த்தியாக நடித்துள்ளார் பூஜா. நானும் விஜய்யும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளோம்," என்கிறார் அறிமுக இயக்குநர் சில்வா.