ரஜினிகாந்த் நடித்து தீபாவளிக்குத் திரைக்கு வந்த 'அண்ணாத்த' படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடிக்க தயாராவதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து ரஜினி பாராட்டி தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார். எனவே அவரது இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முன்னர் 'டாக்டர்', 'பீஸ்ட்' படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று பேசப்பட்டது. ஆனால் 'பீஸ்ட்' படப்பிடிப்பு முடியாததால் ரஜினி படத்தை இயக்குநர் நெல்சன் உடனே தொடங்குவது முடியாத காரியம் என்பதால் ரஜினி புது படத்தின் இயக்குநரை விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
ஹிப் ஹாப் ஆதியை வைத்து 'அன்பறிவு' என்ற படத்தை தயாரித்து வந்த சத்யஜோதி பிலிம்ஸ், அந்தப் படத்துடன் சேர்த்து 'சிவகுமாரின் சபதம்' படத்தையும் தயாரித்தது. 'அன்பறிவு' படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பு, இசையுடன் நிறுத்திக்கொண்டார். 'சிவகுமாரின் சபதம்' படத்தில் எழுத்து முதல் இயக்கம்வரை எல்லாம் ஆதியே. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் துணிச்சலாக வெளியான படங்களில் 'சிவகுமாரின் சபதம்' படமும் ஒன்று. படத்தின் கதையும் காட்சிகளும் சுமார் என்பதால் படம் சரியாக ஓடவில்லை. தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டார் இந்தப் படத்தை வாங்கி டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடுகிறது.
விஷால் நடிப்பில் 'வீரமே வாகை சூடும்', 'லத்தி' படங்கள் தயாராகி வருகின்றன. இதில் முதல் படத்தை விஷாலும் இரண்டாவது படத்தை அவரது நண்பர்கள் நந்தா, ரமணா இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் முதலில் 'வீரமே வாகை சூடும்'
வெளியாகிறது. தீபாவளிக்கு 'எனிமி' வெளியானதுபோல் பொங்கலுக்கு 'வீரமே வாகை சூடும்' வெளியாகும் என எதிர்பார்த்தனர்.
ஆனால், பொங்கலுக்கு அஜித்தின் 'வலிமை' வெளியாவதாலும் சொந்தப் படம் என்பதாலும் விஷால் விஷப் பரிட்சை செய்ய விரும்பவில்லை. ஜனவரி 26க்கு 'வீரமே வாகை சூடும்' வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார். அதேநேரம், இது நல்ல முடிவா என்று
உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம் படம் வெளியான ஒரே வாரத்தில் பிப்ரவரி 4 சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படம் வெளியாகிறது.
அந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' தயாரிக்கிறது. அவர்கள் மொத்த திரையரங்குகளையும் ஆக்கிரமித்து விடும். 2022 ஜனவரி 26 வெளியீட்டுத் தேதியை விஷால் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது.