நடன இயக்குநராகவும் நடிகராகவும்
பணியாற்றிய சிவசங்கர் மாஸ்டர், கொரோனா தொற்றினால் 75 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் நிதி உதவி கேட்டு பதிவிட்டிருந்தார். உடனே பாலிவுட் நடிகர் சோனு சூட்
அவரைத் தொடர்புகொண்டு மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக கூறி உதவி வருகிறார். இதற்கிடையில் நடிகர்
தனுஷும் உதவ முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் உடல்
நலம் தேறி வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல்ஹாசனின் மகள்
ஷ்ருதியும், "என் தந்தை நலமாக இருக்கிறார். விரைவில் உங்களைக் காண வருவார்," என்று பதிவிட்டு இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா, "நலமாக வரவேண்டும் சகோதரரே! கலை உலகை ஆச்சரியப்பட வைக்க விரைந்து வாருங்கள்," என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் சினிமா டிக்கெட் கட்டணங்களை
அதிரடியாகக் குறைத்திருக்கிறது ஆந்திர அரசு. அதனைத்
தொடர்ந்து மூத்த நடிகர் சிரஞ்சீவி, "திரையரங்குகள் செயல்
படுவதற்கும் திரையுலகத்தை நம்பி பல குடும்பங்கள்
வாழ்வதாலும் குறைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை மற்ற
மாநிலங்களில் உள்ளது போன்று மாற்றியமைக்க வேண்டும். இதைத் தயவுசெய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊக்கம் இருந்தால் மட்டுமே தெலுங்குத் திரையுலகம் வாழ முடியும்," என்று ஆந்திர முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் யோகிபாபு
தற்போது 'பொம்மை நாயகி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கிறார். ஜனவரி மாதம் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலையால் தற்காலிகமாக தடைபட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவினருடன் யோகிபாபு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, 'ஜெய் பீம்' படத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு சூர்யா மற்றும் இயக்குநர் ஞானவேலுவை பாராட்டி இருக்கிறார். மீண்டும் அந்தப் படத்தைத் திரையில் காண விருப்பம் தெரிவித்ததோடு நடிகர் சூர்யா, சிவக்குமார், த.செ.ஞானவேலு ஆகியோருடன் திரையரங்கில் படத்தைப் பார்த்துவிட்டு சூர்யாவின் கன்னத்தைச் செல்லமாக வருடி கொடுத்து தன்னுடைய பாராட்டைப் பதிவு செய்தார்.