துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவம்பர் 12ஆம் தேதி 'குருப்' என்ற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தியிலும் வெளியானது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் 'சுகுமார குருப்' என்ற குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
காப்பீட்டுப் பணத்திற்காக வேறொருவரை கொலை செய்து, அடையாளங்களை அழித்து, அது, தான் என்று நாடகமாடிய சுகுமாரன் குருப்பைப் பற்றிய திரைப்படம். இதற்கு முன்பும் இந்தக் கதையை படமாக எடுத்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் 'குருப்' என்ற பெயரில் எடுத்துள்ளனர்.
படம் ஐந்து மொழிகளில் வெளியானதால் ஐந்து நாட்களிலேயே ரூ.50 கோடி வசூலித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது ரூ.75 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் காட்சிகள் திரையிடப் பட்டுள்ளன. துல்கரின் திரைப் பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் இது மிகப்பெரிய சாதனை என்று சொல்கின்றனர் மலையாள திரைத்துறையினர்.