இசை அமைப்பாளராக பல்வேறு அதிரடியான வெற்றி பெற்ற
ஆல்பங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விஜய்
ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் தற்பொழுது
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் ஆண்டனி திரைப்படங்
களுக்கு இசையமைப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்தார்.
இவர் இசையமைத்த முதல் தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா'. அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'கனா காணும் காலங்கள்', 'காதலிக்க நேரமில்லை', போன்ற தொடர்களுக்கு இசையமைத்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி ஆல்பங்களை கொடுத்த விஜய் ஆண்டனி 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.
'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் கதையும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரமும் விஜய் ஆண்டனிக்கு என்றே தனி ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தது. குறிப்பாக பெண்கள் மனதில் இடம் பிடித்தார்.
விஜய் ஆண்டனி நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் 'கோடியில் ஓருவன்'. இந்தத் திரைப்
படத்திலும் அம்மாவின் கனவை நிறைவேற்றும் இளைஞனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள 'தமிழரசன்' இந்த மாத இறுதியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் கவுசல்யா ராணி தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
'திமிரு புடிச்சவன்' திரைப்படத்தினைத் தொடர்ந்து இத்திரைப்
படத்திலும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் விஜய் ஆன்டனி.
மேலும் 'அக்னி சிறகுகள்', 'காக்கி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படம் ஏற்கெனவே விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி
ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'சலீம்' படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ளது.
இந்தப் படத்திற்கு 'மழை பிடிக்காத மனிதன்' என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனது ரசிகர் ஒருவர் விஜய் ஆண்டனி பாணியில் 'ஜிப்ரிஸ்' வார்த்தைகளில் வெளியான இருபத்தி நான்கு பாடல்
களையும் அவற்றின் கால அளவையும் உணவகங்களில் வழங்கப்படும் பில்போல வடிவமைத்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதைப் பலரும் பகிர்ந்ததால் யார் அந்தப் பட்டியலைத் தயார் செய்தார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனால் அவரைக் காணவேண்டி தனது டுவிட்டர் பக்கத்தில், "எனக்கே என்னுடைய அன்பான ரசிகரைப் பார்க்கவேண்டும்போல ஆசையாக இருக்கிறது. யாரப்பா நீ?" என்று பதிவிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.விஜய் ஆண்டனி பகிர்ந்துள்ள இந்தப் பதிவு இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
கட்டண அட்டவணைப் போன்று விஜய் ஆண்டனி பாடி இருக்கும் பாடல்களையும் எவ்வளவு நேரம் அந்த பாடல் இடம்பெறுகிறது என்பதையும் பட்டியலிட்டு டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனியின் ரசிகர் ஒருவர்.

