நடன இயக்குநர் ஹரிகுமார் இப்போது இயக்குநராக மாறி உள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகும் படம் 'தேள்'. பிரபுதேவா நாயகனாகவும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர்.
வசூல் ரீதியில் வெற்றிபெற்ற 'தூத்துக்குடி', 'மதுரை சம்பவம்' உள்ளிட்ட சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார் ஹரிகுமார். திடீரென ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று மனதில் தோன்றியதாம்.
"உடனே பிரபுதேவா மாஸ்டரை அணுகினேன். படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்தார். எளிமையான தோற்றமும் இயல்பான நடிப்பும் கொண்ட நாயகி தேவைப்பட்டார். அப்போது சம்யுக்தாவின் நினைவு வந்தது. 'கோமாளி' படத்தில் மிக இயல்பாக நடித்திருப்பதைப் பார்த்ததும் எந்தவித தயக்கமும் இன்றி அவரை ஒப்பந்தம் செய்துவிட்டோம்," என்கிறார் ஹரிகுமார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் நடன இயக்குநராகப் பணியாற்றிய போது, பிரபுதேவாவுடனும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்பவர், பிரபுதேவாவுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். நடனம் தான் இருவரையும் இணைத்து வைத்தது என்றும் சொல்கிறார்.
"பிரபுதேவா மாஸ்டர் நடனப் புயல் மட்டுமல்ல, மிகச் சிறந்த நடிகர். சின்னச்சின்ன முகபாவங்களால் அசரடிப்பார். தனது நடிப்புத் திறமையை அவர் பல படங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
"ஆனால் இதையெல்லாம் கடந்து அவரை திரையில் வித்தியாசமாக காட்ட வேண்டும் என விரும்பினேன். அதனால் அவருக்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளேன்.
"படத்துக்காக புருவ முடியைக் குறைத்துக் கொண்டுள்ளார். இடதுகை பழக்கம் உள்ளவராக நடித்துள்ளார். இடதுகை பழக்கமுடையவர்கள் கூடுதல் அறிவாற்றலுடன் இருப்பார்கள். எதையும் கச்சிதமாக அணுகக்கூடியவர்கள் என்பதும் அறிவியல் உண்மை. இதை தனது கதாபாத்திரத்தின் மூலம் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
"வெறும் நட்புக்காக அவர் இதில் நடிக்கவில்லை. அவருக்குள் ஒன்றல்ல, நான்கு இயக்குநர்கள் உள்ளனர். கதை பிடித்திருந்ததால் மட்டுமே நடிக்கச் சம்மதித்தார்," என்கிறார் ஹரிகுமார்.
முதன்முறையாக இந்தப் படத்தில் மதுவிடுதியில் நடனமாடும் பெண்ணாக நடித்துள்ளார் சம்யுக்தா. அவரால் சவாலான வேடங்களில் மிக அனாயசமாக நடிக்க முடியும் என்பது ஹரிகுமாரின் கணிப்பு.
"சம்யுக்தா பார்க்கத்தான் எளிமை. இன்ஸ்டகிராமில் அவரை மில்லியன் கணக்கானோர் பின்தொடர்கிறார்கள். கதை தயாரானதும் முன்னணி நாயகிகளில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக இருந்தது. பிறகு கதைக்கு ஏற்ப எளிமையாக தோற்றமளிக்கும் நாயகியைத் தேடலாம் என்று முடிவு செய்தோம். அதன் பிறகு சம்யுக்தா எங்களுடன் இணைந்தார்.
"மிகுந்த அர்ப்பணிப்புடன் நடிக்கும் ஒருசில நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி வைத்து, மனப்பாடம் செய்து, சிறிதும் பிசிறு தட்டாமல் வசனங்களைப் பேசினார். பிரபுதேவாவுக்கும் சேர்த்து சம்யுக்தா தான் நடனமாடி உள்ளார்," என்று தன் பட நாயகியைப் பாராட்டித் தள்ளுகிறார் ஹரிகுமார்.
பிரபுதேவாவின் தாயாராக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். 'காலா' படத்துக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் தேடிவந்த போதும் அவற்றில் நடிக்க மறுத்துவிட்ட அவர், 'தேள்' படத்தின் கதையைக் கேட்டதும் அருமையாக இருப்பதாகப் பாராட்டி, கால்ஷீட் ஒதுக்கினாராம்.
கதையோடு கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்துவிட்ட போதிலும், ஒரு காட்சியை மெருகேற்றுவது என்றால் இயக்குநரிடம் அதுகுறித்து தெரிவித்து, அவரது அனுமதியோடுதான் செயல்படுகிறாராம்.
"வில்லனாக நடித்துள்ளார் சத்ரு. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் இவரைப் பார்த்திருக்க முடியும். மாரிமுத்து, அர்ஜய், இமான் அண்ணாச்சி, 'நாடோடிகள்' பரணி, 'கபாலி' விஷ்வாந்த், உதய் கார்த்திக், மாதவி, மஹானா என மேலும் பலர் உள்ளனர். அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் இருக்கும்," என்கிறார் இயக்குநர். இசை சி.சத்யா.
"தனுஷ், சிவகார்த்திகேயன்,'ஜெயம்' ரவி என எல்லாருக்கும் ஒத்துவரக்கூடிய கதைகளைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். 'தேள்' அந்த இடத்துக்கு என்னை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
"அடுத்து 'அக்னி' என்ற படத்தை இயக்கி நடிக்கிறேன். பாதிப் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் வெளியாகும்," என்கிறார் ஹரிகுமார்.
இந்தப் படம் வெளியானதும் தமிழ்த் திரையுலகத்தினர் மீண்டும் தங்கள் பார்வையை தன் பக்கம் திருப்புவார்கள் என்று உறுதியாக நம்புவதாகச் சொல்கிறார் சம்யுக்தா.
இடையில் சில சர்ச்சைகளில் சிக்க நேர்ந்ததால் தமது பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமது ரசிகர்களின் தொடர் ஆதரவால்தான் திரையுலகில் வாய்ப்புகள் குறையும்போது நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் செயல்பட முடிகிறது என்கிறார். 'தேள்' என்ற தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் பல வகையிலும் தொடர்புகள் இருக்கும். அது படம் பார்க்கும்போது ரசிகர்களுக்குத் தன்னால் புரியும்," என்கிறார் சம்யுக்தா ஹெக்டே.
, :

