வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க வேண்டும் என்றும் எப்போதும் புன்னகையுடன் வலம் வர வேண்டும் என்பதுதான் தன் கொள்கை என்கிறார் நிக்கி கல்ராணி.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் தேடிவருவதாக உற்சாகம் காட்டுபவர், சத்தமில்லாமல் சில சமூக சேவைப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
"எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே என்று பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். அவர்களுக்கான பதில், எனது இயல்பே அதுதான். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, என்னை சிரித்த முகத்துடன்தான் உங்களால் பார்க்க முடியும். மற்றவர்களும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய சிறிய அறிவுரை.
"சோகமான காட்சிகளில் நடித்த பிறகும் நான் சிரிப்பதைப் பார்த்து, உடன் நடித்தவர்களே ஆச்சரியமாகப் பார்த்த சம்பவங்களும் உண்டு.
என்னைப் பொறுத்தவரை ஒரு காட்சியில் நடிக்கும்போது நாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாக மாறிவிட வேண்டும். நடித்து முடித்த பின்னர் நமது உண்மையான இயல்புக்கு திரும்பிவிட வேண்டும்.
"இப்படித்தான் ஒருமுறை படப்பிடிப்பின்போது முக்கியமான காட்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். நான் சற்றே நீளமான வசனத்தைப் பேசியபடியே அழவேண்டும்.
"காட்சி படமாக்கப்பட்டபோது அழுகையுடன் வசனம் பேசினேன். இயக்குநர் 'கட்' என்றதும் சிரித்தபடியே அங்கிருந்த கேரவனுக்குச் சென்றுவிட்டேன். ஆனால் படக்குழுவினருக்கு ஆச்சரியம். அழுது அரற்றியபடியே வசனம் பேசியவர், சிரித்தபடி செல்கிறாரே என்று யோசித்திருக்கின்றனர். இதுதான் எனது இயல்பு," என்கிறார் நிக்கி கல்ராணி.
உயரம் என்றால் இவருக்குப் பயமாம். அதனால் உயரத்தில் எடுக்கப்படும் காட்சிகள் என்றால், இயக்குநரிடம் பேசி வேறு இடத்தில் அக்காட்சியை எடுக்க இயலுமா? என்று கேட்பாராம்.
இன்றைய இளம் தலைமுறையினர் சமூக வலைத்தளங்கள்தான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடுபவர், அதற்கும் அப்பால் ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பதை இளையர்கள் உணர வேண்டும் என்கிறார்.
சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றிய அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் இதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் சொல்கிறார்.
"என் வாழ்க்கை குறித்து மற்றவர்களுக்கு என்னென்ன தெரியலாம் என்ற வரையறையை வகுத்துள்ளேன். ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட நம் வாழ்க்கையுடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பு முக்கியமானது.
"சமூக வலைத்தளங்கள் இன்று நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. இதை மறுப்பதற்கு இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு, தங்கள் அபிமான நடிகர், நடிகைகளை ரசிகர்களால் திரையில் மட்டுமே காண முடிந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது.
"அதற்காக எல்லாமே சமூக வலைத்தளங்களை நம்பித்தான் நடக்க வேண்டும் என்ற நிலையும் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் நான் சமூக ஊடகங்களை நம்பி வாழவில்லை," என்கிறார் நிக்கி கல்ராணி.
ஓடிடி தளங்கள் குறித்து பலவிதமான கருத்துகள் உலா வரும் நிலையில், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தேவை என்பதுதான் நிக்கியின் கருத்து.
"ஓடிடி தளங்கள் மூலம் பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். என்னைப் போன்றவர்கள் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
"அதாவது, பல்வேறு திறமைகளைக் கொண்டிருப்பவர்கள் தங்களை மேலும் கூர்தீட்டிக்கொள்ள, ஓடிடி தளங்கள் கூடுதலாக வாய்ப்பு களைத் தரும் என நம்புகிறேன்," என்று சொல்லும் நிக்கி கல்ராணி, வாய்ப்பு கிடைத்தால், நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைந்தால் இணையத் தொடர்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்.

