'பீஸ்ட்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்படத்தில் தனக்கான காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் நாயகி பூஜா ஹெக்டே.
இதுகுறித்து இன்ஸ்டகிராமில் காணொளி ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் 'பீஸ்ட்' படக்குழுவினரிடம் இருந்து தாம் விடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தப் படம் அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் உருவாகி வருகிறது. விஜய் பாணி, இயக்குநர் நெல்சன் பாணி என இரண்டும் இப்படத்தில் உள்ளன. ஒவ்வொரு காட்சியிலும் ரசித்து நடித்தேன்.
"இப்படிப்பட்ட படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதைப் பெருமையாகக் கருதுகிறேன். மிக விரைவாக படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கவில்லை. அதனால் படக் குழுவை பிரிவது வருத்தம் தருகிறது," என்று பூஜா தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வகையில் இந்தப் படத்தில் நடித்தது மிக இனிய அனுபவமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பதால் தென்னிந்திய சினிமாவில் தனக்கான இடத்தை வலுவாக தக்கவைக்க முடியும் என்று நம்புவதாகவும் தொடர்ந்து இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் அமையும் என நம்புவதாகவும் சொல்கிறார்.
'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனமாடியதும் மறக்க முடியாத அனுபவம் என்கிறார் பூஜா.
இந்தப் படம் வெற்றிபெற்றால் இவரது சம்பளம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

