இளையர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது 'என்ன சொல்லப் போகிறாய்' திரைப்படம்.
அஸ்வின், தேஜு அஸ்வினி, புகழ், அவந்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஹரிஹரன் இயக்கி உள்ளார். இணையத் தொடர்கள் மூலம் இளம் ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர் இவர்.
இது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கதையாம். காதல், உறவுகள் குறித்து பேசுவதிலும் அது தொடர்பான கதைகளை உருவாக்கவும் தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர், இது முழுமையான இளமை ததும்பும் காதல் கதை என்கிறார்.
"உலகம் முழுவதும் காதல் கதைகளைச் சொல்வதற்கு சில வழிமுறைகள்தான் உள்ளன. அவற்றுடன் நாம் வேறு எந்த மாதிரியான சுவாரசியம் தரக்கூடிய அம்சங்களை சேர்க்கிறோம் என்பதில்தான் வெற்றி அமைந்துள்ளது.
"மனதை நெருடாத நகைச்சுவையுடன் இளையர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது.
"படத்தைப் பார்த்த பிறகு நமக்கும் இப்படியொரு காதல் அமைய வேண்டும் என்று நிச்சயம் நினைக்கத் தோன்றும்," என்கிறார் இயக்குநர் ஹரிஹரன்.
கதை நாயகனாக அஷ்வினை தேர்வு செய்ய தாம் சிறிதும் தயங்கவில்லை என்று குறிப்பிடுபவர், அஷ்வினுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பது தமக்கு கூடுதல் தெம்பளிப்பதாகச் சொல்கிறார்.
"ஒரு படத்துக்கான பணிகளைத் தொடங்கும்போதே, கதைக்குத் தேவையான அனைத்தையும் தீர்மானித்துவிட வேண்டும். நல்ல கதைகள் தனக்கு தேவையானவற்றை தானாக தேர்ந்தெடுத்துவிடும் என்பார்கள். அப்படித்தான் இந்தக் கதைக்குத் தேவையான கதாநாயகனில் தொடங்கி தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை எல்லாம் தன்னால் அமைந்தது.
"அஷ்வினைப் பொருத்தவரை ஏற்கெனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்துவிட்டார். மேலும், என் கதைக்கான நாயகனாக கச்சிதமாகப் பொருந்தி இருந்தார். அர்ப்பணிப்புடன் வேலை பார்க்கக் கூடியவர் என்பதை இணைந்து பணியாற்றியபோதே தெரிந்து கொண்டேன்.
"அஷ்வினுக்கு என்று ரசிகைகள் கூட்டம் உள்ளது. அவர்கள் அனைவருமே இந்தப் படத்தை நிச்சயம் பாராட்டுவார்கள் என நம்புகிறேன்," என்கிறார் ஹரிஹரன்.
தேஜு, அவந்திகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் புகழ் நகைச்சுவைப் பகுதிக்குப் பொறுப்பேற்றுள்ளார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களின் வயிற்றைப் பதம் பார்க்கும் வகையில் இருக்குமாம்.
"உண்மையில் பட வேலைகளைத் தொடங்கியதும், முதலில் அவந்திகாதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரைப் பார்த்த நிமிடமே, குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று உள்மனதில் தோன்றியது. அடுத்து தேஜு ஒப்பந்தமானார். இருவருமே ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கி உள்ளனர்.
"பொதுவாக காதல் கதைகளுக்குப் புதுமுகங்களை தேர்வு செய்வது நல்லது. காரணம், புதுமுகங்களை வைத்து கதை சொல்லும்போது, ரசிகர்கள் கூடுதல் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். மேலும், இதுவரை இணைந்து நடித்திராத இணை என்றால் ரசிகர்களுக்கு எந்தவிதமான மன நெருடலும் ஏற்படாது.
"அந்த வகையில் எனது இரு நாயகிகளுமே இந்தப் படத்தில்தான் அறிமுகமாகிறார்கள். ஆனால் முதல் படம் என்று தீர்மானிக்க இயலாத வகயில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்," என்கிறார் ஹரிஹரன்.
'ஆசை...', 'கியூட் பொண்ணு...' என இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு இளையர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மெர்வின் இசையில் இந்தப் பாடல்களை எழுதியவர் விவேக்.
"இந்த இருவரது கூட்டணி பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தும். படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற பாடல்களும் அருமையாக உள்ளன. பின்னணி இசையும் ரசிக்க வைக்கும். படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்லத்தக்க வகையில் அசத்தி உள்ளார் மெர்வின்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'டைட்டானிக்' படத்தில்கூட, 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றுதான் காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.
"வித்தியாசமான காதல் கதை என்பதே இல்லை. காதலைச் சொல்லும் தருணம்தான் மாறுபடும். அதுதான் மிகவும் முக்கியம். காதலை வேறுபடுத்திக் காட்டுவதும் அந்தத் தருணம்தான்.
"இந்தப் படத்தில் நீங்கள் காணப்போகும் அந்தத் தருணம் நிச்சயம் ஆழ்மனதில் ஒருவித சிலிர்ப்பை உண்டாக்கும்.
"மிக விரைவில் இசை வெளியீட்டு விழாவுக்கு திட்டமிட்டுள்ளோம். அப்போது மற்ற பாடல்களையும் கேட்க முடியும்," என்கிறார் ஹரிஹரன்.
படம்: தேஜு அஸ்வினி.

