தாம் கதாநாயகர்களுக்காக கதை எழுதுவது இல்லை என்கிறார் 'பாகுபலி' ராஜமவுலி. முழுக் கதையையும் எழுதி முடித்த பிறகே கதாநாயகன் யார் என்பதை முடிவு செய்வதாகக் கூறுகிறார்.
"எந்த கதாநாயகனின் கால்ஷீட் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டு கதை எழுதுவது எனது வழக்கம் அல்ல. அது எனக்கு சரிப்பட்டு வராது. தற்போது இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் மனநிறைவு தரும்," என்கிறார் ராஜமவுலி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்துள்ளார் பூமிகா.
மீண்டும் தமிழில் நடிக்க விரும்புவதாகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களை எதிர்பார்ப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
"கடந்த இருபது ஆண்டுகளாக ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் பலமுறை நடித்துவிட்டேன். இதனால் சலிப்பாக உள்ளது. இனி வித்தியாசமான, எதிர்மறை பாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் பூமிகா.
விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்குவார் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் சேரன். இப்படத்துக்கு 'தமிழ் குடிமகன்' எனத் தலைப்பு வைத்துள்ளனர். தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தில் நடித்து வருகிறார் சேரன்.
சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிட்டுள்ளனர். 'வாடா தம்பி' எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

