"திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி 19 ஆண்டுகள் உருண்டோடிவிட்டதை நம்பவே முடியவில்லை," என்கிறார் திரிஷா.
கடந்த 1999ஆம் ஆண்டில் 'மிஸ் சென்னை' அழகிப் போட்டியில் வாகை சூடியவர், அதே ஆண்டு வெளியான 'ஜோடி' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பெரிதாக எந்த வாய்ப்பு அமையவில்லை. பின்னர் 2002ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு திரிஷாவின் திரைப்பயணத்தில் அவர் எட்டிப்பிடிக்க உயரங்கள் மட்டுமே காத்திருந்தன. பல வெற்றிப்படங்களில் நடித்ததால் வெகு விரைவில் முதல்நிலை நாயகியாக உருவெடுத்தார்.
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என அனைத்து முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்போது அதிக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், தென்னிந்திய திரையுலகில் இவரது மதிப்பு குறைந்துவிடவில்லை. இப்போதும் கூட நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களுக்கு இவரது பெயர் பரிசீலிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரசிகர்களின் அன்பும் தனது நலனில் அக்கறை கொண்டவர்களின் பாசமும்தான் தம்மை உயரங்களைத் தொட வைத்ததாகச் சொல்கிறார் திரிஷா.
திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
"உங்களுக்கு விடுமுறை தேவைப்படாத ஒரு வேலையைப் பெறுங்கள் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். உண்மையில் நான் அதைத்தான் செய்தேன். நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன்.
"இந்தப் பயணத்தில் என்னோடு இருப்பவர்களை எப்போதும் விலகிச்செல்ல விடமாட்டேன். உங்கள் அனைவராலும்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் மிகச்சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை," என்று திரிஷா தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷா நடித்துள்ள 'சதுரங்க வேட்டை 2', 'கர்ஜனை' உள்ளிட்ட படங்கள் சில காரணங்களால் வெளியீடு காணவில்லை.
அந்தப் படங்கள் வெளியானதும் பல நல்ல வாய்ப்புகள் தம்மைத் தேடிவரும் என நம்புவதாகச் சொல்கிறார் திரிஷா.
, :
திரிஷா

