'காதல் கோட்டை' கட்டி சிறந்த இயக்குநருக்கான இந்திய அரசின் தேசிய விருது பெற்றவர் அகத்தியன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்போது, அகத்தியன் திறமை அவரது மகளிடம் இருக்காதா என்ன?
'சர்வைவர்' ரியாலிட்டி நிகழ்வில் பங்கேற்று, தனது திறமையாலும் அதிரடியாலும் ரசிக உள்ளங்களை கவர்ந்துள்ளார் விஜயலட்சுமி.
இறுதிவரை தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, அந்தப் போட்டியின் வெற்றியாளராகத் தேர்வாகி, ஒரு கோடி ரூபாய் பரிசும் பெற்றுள்ளார்.
'சென்னை-28' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான விஜயலட்சுமி தமிழ், கன்னடம் உட்பட சுமார் 15 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும், தன் கணவர் ஃபெரோஸ் மொஹமத் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்த 'பண்டிகை' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் ஆனார்.
இந்நிலையில், தமிழில் புதிய முயற்சியாக 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி தயாரித்த 'சர்வைவர்' என்கிற அதிரடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு விஜயலட்சுமிக்கு கிடைத்தது.
உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்பதுதான் இந்த நிகழ்வு வெளிப்படுத்தும் கருத்து.
ஆப்பிரிக்காவின் அடர்ந்த தீவுப் பகுதி ஒன்றில் விக்ராந்த், நந்தா, உமாபதி, விஜயலட்சுமி உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் 'காடர்கள்', 'வேடர்கள்' என இரு குழுக்களாக களமிறக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கினார்.
காட்டுக்குள் கிடைப்பதைக் கொண்டு தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பது விதி.
இதில் எதிர்பாராத பல சாகசங்களையும் நிறைவேற்ற வேண்டி இருக்கும். எதிர்பாராத சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஒருவர் வெளியேற்றப்பட்டு, 90 நாள்கள் பரபரப்பாக இந்த நிகழ்ச்சி நடந்து வந்தது.
இறுதிக்கட்டத்தில் விஜயலட்சுமி, நாராயணன், வானசா, உமாபதி, சரண் ஆகியோர் களத்தில் தாக்குப் பிடித்தனர். உச்சகட்டத்தில் விஜயலட்சுமிக்கும் சரணுக்கும் இடையேதான் கடும் போட்டி. எழுபது நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் வெற்றிவாகை சூடினார் விஜயலட்சுமி என அர்ஜுன் அறிவித்தார்.
"திருமணமாகிவிட்டது, குழந்தையும் பிறந்துவிட்டது. இனிமேல் செய்வதற்கு ஒன்றும் இல்லை," என்று சலிப்படையும் இளம் தாய்மார்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது விஜயலட்சுமியின் வெற்றி.
ஒரு குழந்தைக்கு தாயான பின்புதான் மிகுந்த தைரியசாலியாக மாறியதாகச் சொல்லி, இளம் தாய் மார்களை ஊக்கப்படுத்தி உள்ளார் விஜயலட்சுமி.
போட்டியில் வெற்றி பெற்று, சிங்கப் பெண்ணாக வீடு திரும்பிய விஜயலட்சுமி தன் எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.
"அனைவரின் அன்பிற்கும் சக போட்டியாளர்களுக்கும் நன்றி. முதல் நாளில் இருந்தே நாங்கள் அனைவரும் கடுமையாகப் போராடினோம். உங்களிடம் சொல்ல, பல கதாநாயகர்களின் கதைகள் உள்ளன. விரைவில் சொல்வேன்," என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

