சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', சிம்புவுடன் 'மாநாடு', மோகன்லாலுடன் 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்' என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குநரான பிரியதர்ஷன், நடிகை லிசி ஆகியோரின் மகள், உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம், சிறு வயது முதல் படப்பிடிப்புத் தளத்திலேயே பெரும்பாலான பொழுதைக் கழித்தது என எல்லாமும் சேர்ந்து கல்யாணியை ஒரு திரைப்பட நடிகையாக நம் கண்முன்னே நிற்க வைத்திருக்கிறது.
"சிறு வயது முதல் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம் சினிமாதான். பள்ளி விடுமுறை நாள்களிலும்கூட எங்காவது வெளியே சென்று வர வேண்டும் என்று தோன்றாது. அப்போது எல்லாம் படப்பிடிப்பு தளத்தில்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடிக்கும்.
"சினிமா ஆர்வம் சூழத்தான் என் வாழ்க்கை தொடங்கியது. அதுதான் உண்மை. அந்த ஆர்வம்தான் என்னை நடிகையாக மாற்றி உள்ளது.
"எனினும், திரையுலகில் நான் யார் என்பதைக் கண்டறிய கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது. இப்போது அதுகுறித்த ஒரு தெளிவும் புரிதலும் ஏற்பட்டுள்ளது," என்கிறார் கல்யாணி.
என்னதான் இவருக்கு ஆர்வம் இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே மகளை சினிமாத்துறையில் கால்பதிக்க விடவில்லை பிரியதர்ஷன். முதலில் அமெரிக்காவில் கட்டடக்கலை, கலை இயக்கம் தொடர்பாக படிக்க வைத்துள்ளார்.
காரணம், நடிகையாவதைவிட, தொழில்நுட்பக் கலைஞராக திரையுலகில் சாதிக்க வேண்டும் என்பதுதான் கல்யாணியின் விருப்பமாக இருந்துள்ளது.
படிப்பை முடித்த கையோடு தாய்நாடு திரும்பியவர், கலை இயக்குநர் சாபு சிரில் அணியில் உதவியாளராக இணைந்துள்ளார். 'கிரிஷ்', 'இருமுகன்' ஆகிய படங்களில் பணியாற்றினாராம்.
"எப்படியாவது பெரிய கலை இயக்குநராக வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு ஏற்றாற்போல் சில திட்டங்களையும் வகுத்து வைத்திருந்தேன்.
"ஆனால் நாம் ஒரு கணக்கு போட்டால், தெய்வம் வேறு திட்டத்தை வைத்திருக்கும் என்பார்கள் அல்லவா, அதுதான் என் வாழ்க்கையில் நடந்தது.
"அம்மாவுக்கு நானும் அவரைப்போல் நடிகையாக வேண்டும் என்று ஆசை. அப்பாவுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. சினிமாவில் எது பிடித்திருக்கிறதோ, அதை தேர்வு செய்து சாதிக்கப் பார் என்று கூறிவிட்டார்.
"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்குப் பட வாய்ப்பு தேடிவந்தது. அதில் நடித்த பிறகு நானே எதிர்பாராத வகையில் ஏராளமான வாய்ப்புகள் தேடிவந்தன. அதனால் தெலுங்கில் ஒரு நடிகையாகவே நீடிப்போம் என்று முடிவு செய்தேன். காரணம், பெரும்பாலான தெலுங்குப் படங்களில் கதாநாயகிகளுக்கு நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையாது. மேலும் புதுமுகம் என்பதால் நம் மீது ரசிகர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்காது.
"எனினும் அம்மா, அப்பா இருவருமே திரையுலகில் முத்திரை பதித்தவர்கள். அவர்களுக்கு உள்ள மரியாதையைக் காப்பாற்ற வேண்டும். இந்தப் பொறுப்புக்காக நிறைய உழைக்க வேண்டி இருந்தது," என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தமிழில் 'மாநாடு', மலையாளத்தில் 'மரைக்காயர் - அரபிக்கடலின் சிங்கம்' என்று இவர் நடித்து அண்மையில் வெளியீடு கண்ட இரண்டு படங்கள் வசூலில் அசத்தி உள்ளன. அதிலும், மலையாளப் படத்தை இயக்கியது கல்யாணியின் தந்தை பிரியதர்ஷன்.
"அப்பா படம் என்பதால் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. உண்மையில் அவர் முன்னால் நடிக்க பயந்தேன். படம் வெற்றி பெற்றதில் அப்பாவுக்கும் சேர்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். 'மாநாடு' படத்தில் சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளேன்.
"என் தாய்மொழி மலையாளம். ஆனால், சிறு வயதில் பெரும்பாலும் சென்னையில் இருந்ததால் தமிழ் பேசி வளர்ந்தேன். இந்தித் திரையுலகில் என் பணியைத் தொடங்கி, தெலுங்கில் நடிகையாக அறிமுகமானேன். அமெரிக்காவில் படித்ததால் ஆங்கிலம் தெரியும். இவற்றுள் சில மொழிகள் ஓரளவு தெரியும்," என்கிறார் கல்யாணி.
, :

