தமிழ் சினிமா உலகில் சத்தமின்றி சில சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு' படம் உலக அளவில் பேசப்படுகிறது. ஒரு கோடி ரூபாயில் படம் எடுத்த நிலை மாறி, கோடம்பாக்கத்தில் தயாரிக்கப்படும் படத்தில் ஐநூறு கோடி ரூபாய் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 81 நிமிடங்களில் ஒரு படத்தை முழுமையாக எடுத்து முடித்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பு '3.6.9'.
அறிமுக இயக்குநர் சிவ மாதவ் இயக்கியுள்ள இப்படத்தில் கே.பாக்யராஜ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிளாக் பாண்டி, அஜய் கண்ணன், சுகைல், சத்தி மகேந்திரா ஆகியோரும் உள்ளனர். கார்த்திக் ஹர்ஷா இசை அமைத்துள்ளார்.
முதல் காட்சி தொடங்கிய பின்னர் இடைவிடாமல் அடுத்தடுத்த காட்சிகளைப் படமாக்கி உள்ளதாகச் சொல்கிறார் சிவ மாதவ்.
"மொத்தம் 81 நிமிடங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். இது நிச்சயம் பெரும் சாதனைதான். புதுவையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் காலை 11.40 மணிக்குத் தொடங்கி மதியம் 1.01 மணி வரை தொடர்ச்சியாக 81 நிமிடங்கள் படப்பிடிப்பை நடத்தினோம்.
"ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள் மூலம் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்புக்காக 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகளும் 450 பணியாளர்களும் தயார் நிலையில் இருந்தனர்," என்கிறார் இயக்குநர் சிவ மாதவ்.
உலக சாதனைகளைப் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு இப்படம் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவாம். சண்டை, பாடல் காட்சிகள் இல்லை. எனினும் படத்தை திரையில் காணும்போது அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ள உணர்வு ஏற்படும் என்கிறார் இயக்குநர்.

