'புஷ்பா' படத்தில் இடம்பெற்றுள்ள 'சாமி சாமி' (வாய்யா சாமி) என்கிற பாடல் ஆந்திராவின் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதே பாடலை அப்படத்தின் தமிழ்ப் பதிப்பில் பாடியுள்ளார் ராஜலட்சுமி செந்தில்கணேஷ்.
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர் ராஜலட்சுமி, செந்தில்கணேஷ் தம்பதியர்.
இந்நிலையில், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளதாகவும் அதில் இடம்பெறும் அதிரடிப் பாடல் ஒன்றை செந்தில் கணேஷ் தம்பதியர் பாடுவதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். ஆனால் செந்தில் கணேஷ் தம்பதியர் இதை மறுத்துள்ளனர்.
'புஷ்பா' படப்பாடலைப் பாடும்போது படபடப்பாக உணர்ந்ததாகச் சொல்கிறார் ராஜலட்சுமி.
"தெலுங்கில் அந்தப் பாடலைக் கேட்டபோது, ஒருவித வேகம், வலிமை, புத்துணர்ச்சி என எல்லாம் இருந்தன. அதற்கு இணையாக தமிழ்ப் பாடலும் அமைய வேண்டும் என விரும்பினேன்.
"இந்த எண்ணத்துடன்தான் பாடி முடித்தேன். ஆனால் இந்த அளவுக்கு பாடல் ரசிகர்களைச் சென்றடையும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
"என் தாயார் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கும் ஆவல் இல்லாதவர். ஆனால் 'சாமி சாமி' பாடலைக் கேட்ட பிறகு 'புஷ்பா' படம் பார்க்க திரையரங்குக்கு அழைத்துப் போகச் சொன்னார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தது மிக மகிழ்ச்சியான தருணம்," என்கிறார் ராஜலட்சுமி.
விஜய் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதா? என்று கேட்ட அடுத்த நொடியே, அது தவறான தகவல் என்கிறார் செந்தில்கணேஷ்.
எனினும் அஜித் படத்தில் பாடிவிட்டதால் விஜய் படத்திலும் பாட ஆவலுடன் காத்திருப்பதாக இருவரும் சொல்கின்றனர்.

