விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கப்போவது தெரிந்த செய்திதான். அந்தப் படத்துக்கான பாடல்களுக்கு மெட்டமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வம்சி இயக்கும் படம், தனது முந்தைய படங்களின் வசூலைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளாராம் விஜய். மேலும் ரசிகர்களை அனைத்து வகையிலும் திருப்திப்படுத்தும் வகையில் படம் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே குடும்பத்துடன் லண்டன் செல்லும் விஜய், அங்கு குறைந்தபட்சம் ஒருமாத காலம் தங்கியிருக்கப் போவதாகத் தகவல்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு, பொங்கலுக்குப் பிறகு அவர் நாடு திரும்புவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
சென்னை வந்தடைந்த கையோடு வம்சி இயக்கும் படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக ஒரு பாடலை மட்டும் சென்னையில் படமாக்கிவிட்டு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய படத்துக்கு தமன் இசையமைக்கப் போகிறார். தெலுங்குத் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டதால், அங்கு வேலை பார்ப்பது அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளதாம்.
இதை அறிந்த விஜய் படத்தின் தயாரிப்புத் தரப்பு, தமனை சென்னைக்கு அழைத்து வந்துள்ளது. பெரிய நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில், ஆகக் கடைசியான மாடியில், தமனுக்காக தனி இசை அரங்கமே அமைத்துக் கொடுத்துள்ளனராம். அங்கு தங்கியுள்ள தமன், பாடல்களுக்கு மெட்டமைத்து வருகிறார். ஒன்றிரண்டு நாள்கள் மெட்டமைப்பின்போது விஜய்யும் நேரில் வந்து அதில் பங்கேற்றுள்ளார். அவரது வருகை தமனை வெகுவாக ஆச்சரியப்படுத்தியதாம்.
தனது இசையில் விஜய் பாட வேண்டும் என்று தமன் தன் விருப்பத்தைச் சொல்ல, "ஆகட்டும் பார்க்கலாம்," என்பதே விஜய்யின் தற்போதைய பதிலாக இருந்துள்ளது.
"இப்போதெல்லாம் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்கள் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டால்தான் தயாரிப்பாளர்கள் ஓரளவு லாபம் பார்க்க முடிகிறது. அதனால் ஒவ்வொரு படமும் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர், இயக்குநர் மட்டுமல்லாமல் முன்னணி நாயகர்களும் உணர்ந்துள்ளனர். விஜய்க்கும் அந்த கவலையும் அக்கறையும் உள்ளது.
"முன்பெல்லாம் பாடலுக்கான மெட்டு அமைக்கப்பட்டதும், அதைக் கேட்டு கதாநாயகர்கள் கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் இப்போது மெட்டமைக்கும்போதே இசையமைப்பாளருடன் அமர்ந்து அதைக் கேட்கிறார்கள். மேலும் பாடல் வரிகளில் கூட கவனம் செலுத்துகிறார்கள்," என்கின்றனர் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இதற்கிடையே, 'பீஸ்ட்' படத்தில் இயக்குநர் செல்வராகவன் மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. கதைப்படி அவர் மோசமான அரசியல்வாதியாக நடித்திருப்பதாக முன்பு தகவல் வெளியானது.
ஆனால் அது தவறான தகவல் என்றும் அவர் இணைய ஊடுருவியாக (ஹேக்கர்) நடித்துள்ளதாகவும் மற்றொரு தக வல் தெரிவிக்கிறது.
செல்வராகவன் நடித்த சில காட்சிகளை மட்டும் விஜய்க்கு திரையிட்டுக் காட்டினாராம் 'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
அவற்றைப் பார்த்து அசந்துபோன விஜய், "உடனடியாக செல்வராகவனுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் மேலும் சில காட்சிகளை இணைக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.
அதனால்தான் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகும் 'பீஸ்ட்' படப்பிடிப்பு மேலும் ஒரு வாரம் நீடித்தது. அப்போது செல்வராகவன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி உள்ளனர்.
இயக்குநர் மூலம் இதை அறிந்த செல்வராகவன் விஜய்யை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்பிலும் உற்சாக மாக பங்கேற்றுள்ளார்.
, :

