'மாநாடு' படம் பார்த்த ரஜினி, தொலைபேசி வழி தொடர்புகொண்டு சிம்புவிடம் பேசியுள்ளார்.
அப்போது, படம் சிறப்பாக இருப்பதாகவும் தனது நடிப்பு அபாரம் என்றும் ரஜினி பாராட்டியதை வாழ்நாளில் மறக்க இயலாது என்கிறார் சிம்பு.
திரும்பிய திசையெல்லாம், எப்போது திருமணம் என்று கேட்கிறார்களாம். 37 வயதில் தாம் அனைத்து விதமான அனுபவங்களையும் கடந்து வந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், மனதுக்குப் பிடித்த பெண் கிடைத்தால் உடனே திருமணம்தான் என்கிறார்.
"திடீரென்று ஒரு நாள் என் உதவியாளர் ரஜினி சார் அழைத்துள்ளார் என்று கைபேசியை நீட்டினார். எடுத்துப் பேசினால், உண்மையாகவே அவர்தான் எதிர்முனையில் இருந்தார்.
"இப்போதுதான் 'மாநாடு' படம் பார்த்தேன் சிம்பு. நல்ல வேகம் காட்டியிருக்கிறீர்கள். தோற்றத்திலும் அறவே மாறிவிட்டீர்கள். உங்கள் அனுபவமும் திரையில் பேசுகிறது. இந்த வெற்றியை விட்டுவிடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் நடிப்பு அமர்க்களமாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி என்றார்.
"அவரது வார்த்தைகளில் இருந்த உண்மை என் மேல் அவர் கொண்டிருக்கும் அன்பைக் காட்டியது. ஒவ்வொரு வார்த்தையிலும் கனிவு இருந்தது," என்கிறார் சிம்பு.
'மாநாடு' படத்தின் தலைப்பில் இவரது பெயருக்கு முன்னால், 'ஆத்மன்' என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. இது என்ன புது பட்டப்பெயர் என்று கேட்டால், அப்படி எதுவும் இல்லை என்கிறார்.
"ஆத்மன்' என்பது ஒருவிதமான வாழ்க்கைமுறை. எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித்தரும். தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக் கொள்வதுதான் இதற்கு அர்த்தம்.
"நல்ல நேர்மறை சிந்தனையைத் தரும் வார்த்தையாக உள்ளது என்று வெங்கட் பிரபு சொன்னார். இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் கூறியபோது நானும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
"முன்பு என் பெயருக்கு முன்னால் 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்று போடுவார்கள். நானும் அதற்கு சம்மதித்தேன். பிறகு நானே அது வேண்டாம் என்றும் முடிவெடுத்தேன். அதனால் எனக்கு பட்டப்பெயர் மீதெல்லாம் ஆசை கிடையாது," என்கிறார் சிம்பு.
37 வயதில் தன் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து முடிந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், இனி தமது பயணம் நல்லவற்றை நோக்கி மட்டுமே இருக்கும் என்கிறார்.
இளம் வயதிலேயே காதல், புகழ், பணம், பின்னர் காதல் முறிவு, தோல்வி என்று அனைத்தையும் பார்த்துவிட்டதாகச் சொல்பவர், தற்போது ஒருவித நிதானத்துக்கு வந்திருப்பதாகவும், கனிவான மனநிலையை அடைந்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
"25 வயதுக்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. யாருக்கும் இந்த வயதுக்குள் இவ்வளவு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஆனால், எனக்கு இன்னும் காலம் இருக்கிறது. தவறுகளைத் திருத்திக்கொள்ளலாம்.
"நல்லது, கெட்டது என இரண்டையும் பார்த்துவிட்டதால், எனது தேடல்கள் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி எல்லாமே சரியாக இருக்கும். என்னைப் பற்றிய குறை கூறல்கள் இருக்காது," என்கிறார் சிம்பு.
திடீரென ஆன்மிகத்தில் நாட்டம் காட்டியது குறித்து கேட்டால், இப்போதுதான் அது குறித்து ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார். வேடிக்கையாகத்தான் இமய மலைக்குச் சென்று வந்தாராம். ஆனால், அங்குதான் உண்மையான அமைதியை உணர முடிந்ததாம்.
"நாம் எதற்காக இங்கு வந்தோம் என்ற ஒற்றைக் கேள்விதான் மனதில் நின்றது. நான் சிம்புதானா என்று கேட்கத் தோன்றியது. திடீரென ஒரு புள்ளியாக மாறி, அடையாளமே இல்லாமல் நின்றேன். அப்போதுகூட மனதில் பிரமிப்பு மட்டும்தான் இருந்தது. இமய மலைப் பயணம் பலவற்றைப் புரிய வைத்தது.
"உண்மையில் எல்லாமே என்னிடம் இருந்தது; ஆனால் இல்லை. காதலித்தேன், வெளியே வந்தேன். மெல்ல ஆன்மிகத்துக்குள் நுழைந்தேன்.
"பைபிள், குர்ஆன், கீதை என்று படிக்கத் துவங்கிவிட்டேன். ஒரு சமயம் எட்டு மணி நேரம்கூட தொடர்ந்து தியானத்தில் இருந்திருக்கிறேன். அதைக் கண்டு என் அம்மா பயந்துவிட்டார். என் கடவுளுக்கு முகமே கிடையாது. நண்பர்களிடம் தோளில் கைபோட்டுப் பேசுவதுபோல் என் சாமியிடம் பேசுவேன்," என்கிறார் சிம்பு.
நெருக்கமானவர்களும்கூட, 'திருமணமே வேண்டாம் என்று இருக்கப் போகிறீர்களா?' என்று கேட்கிறார்களாம். திரையுலக நண்பர்களோ, 'இன்னொரு சல்மான் கான்' என்று விளையாட்டாகச் சொல்கிறார்களாம்.
அவர்களுக்கு சிம்புவின் பதில், 'நிச்சயம் திருமணம் செய்வேன்' என்பதுதான்.
"திருமணம் செய்யும் பெண்ணை எனக்குப் பிடித்திருக்க வேண்டும். அதேபோல் அவருக்கும் என்னைப் பிடிக்கவேண்டும். என் அப்பா, அம்மாவைப் போல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்ற ஆசை. இப்படிப்பட்ட ஒரு பெண்ணைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். எனக்கானவர் எங்கே போய்விடப் போகிறார். விரைவில் கண்ணில் படுவார். பிறகு திருமணம்தான்," என்கிறார் சிம்பு.
அடுத்து, 'பத்து தல', 'கொரோனா குமார்', 'வெந்து தணிந்தது காடு' என்று மூன்று படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சிம்பு. அவற்றுள் கௌதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' முதலில் வெளியாகிறது.

