அரசியல் களத்தில் இருந்து சில காலம் விலகி நின்று, மீண்டும் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் கருணாஸ்.
கடந்த ஆண்டு 'சூரரைப் போற்று', 'சங்கத் தலைவன்' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தவருக்கு இப்போது 'ஆதார்', 'விருமன்' என்று அவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. 'ஆதார்' படத்தின் நாயகனும் இவர்தான்.
''என் மனைவிக்கும் மகனுக்கும் நான் எப்போதுமே கதாநாயகன்தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் நான் நாயகனாக நடிக்கும் படத்தைப் பொறுத்தவரை எப்போதுமே கதைதான் நாயகன். 'ஆதார்' அடிப்படை மக்களுடைய பிரச்சினைகளைப் பேசும் படம்.
"குறிப்பாக மலைவாழ் மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுகிறது. 'ஜெய்பீம்' போல அழுத்தமான கதை. எளிய மனிதர்களின் வலிகளையும் வேதனைகளையும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் பேசும். இதில் அரசியல் இருக்கிறது. ஆனால் அது உலக அரசியல்."
"மலைக்கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வரும் ஒரு கணவன், மனைவியைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்தான் கதை. அருண்பாண்டியன் சார், ஆனந்த்பாபு, 'பாகுபலி' வில்லன் பிரபாகர், இனியா, ரித்விகா எனப் பலர் நடித்துள்ளனர். 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார் இதை இயக்கி உள்ளார்.
"ஸ்ரீகாந்த் தேவாவும் பால்ஜேவும் இசையமைத்துள்ளனர்," என்று சொல்லும் கருணாஸ், 'விருமன்' படத்தில் பாலு என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். கதைப்படி, நாயகன் கார்த்திக்கு இவர்தான் தாய்மாமனாம்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் முன்பு, என் தோட்டத்தில் வெட்டியாக உட்கார்ந்து ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தேன். நடிக்க முடியுமா என்று கேட்டனர். உடனே ஒப்புக்கொண்டேன்.
"இந்தப் படத்தின் கதை பாலு என்ற கதாபாத்திரத்தில்தான் தொடங்கும். கதையை முடித்து வைப்பதும் அதே பாத்திரம்தான். மீண்டும் ஓர் அழுத் தமான கதாபாத்திரம் அமைந்தது மகிழ்ச்சியும் மனநிறைவும் தந்திருக்கிறது," என்கிறார் கருணாஸ்.

