கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். ஊடகத்துறைதான் கதைக்களமாம்.
முதன்முறையாக தனுஷ் செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகச் சொல்கிறார் கார்த்திக் நரேன்.
'இந்த வகை படம்' என்று முத்திரை குத்த இயலாத வகையில், அடிதடி, திகில், நகைச்சுவை, உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்து அம்சங்களுடன் தயாராகி வருகிறது 'மாறன்'.
"ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறது என்று சொல்வோம். அதுபோன்று எந்தவொரு தொழில்நுட்பத்துக்கும் சாதக, பாதக அம்சங்கள் இருக்கும்.
"சமூக ஊடகங்களும் அப்படித்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அது ஓர் ஆயுதம். நம்முடைய தற்காப்புக்காகப் பயன்படுத்தலாம். பிறரை அழிக்கவும் கைகொடுக்கும்.
"அந்த வகையில் ஊடகம் என்ற ஆயுதத்தை தனுஷ் எதற்கு, யாருக்காகப் பயன்படுத்துகிறார், அதன் மூலம் யாரை எதிர்க்கிறார் என்பதை இரண்டு மணி நேரம் திரையில் காண்பிக்க உள்ளோம்.
"இந்தப் படத்துக்காகத்தான் தனுஷ் சாரை முதன்முதலாக சந்தித் தேன். அவரை இயக்கும்போது கேமராவுக்குப் பின்னால் ஓர் இயக்குநராக மட்டுமல்லாமல், ரசிகனாகவும் அமர்ந்து கவனிப்போம். பல சமயங்களில் காட்சியை முடிப்பதற்கு 'கட்' சொல்ல மறந்து போயிருக்கிறேன். அந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
"படத்தின் அறிமுகப் பாடலையும் அவர்தான் பாடியுள்ளார். இது ரசிகர்களுக்கு தனி விருந்தாக அமையும்," என்கிறார் கார்த்திக் நரேன்.
'மாறன்' படத்தில் தனுஷுடன் நாயகியாக இணைந்துள்ளார் மாளவிகா மோகனன். தனது பிறந்தநாளின்போது, அடுத்து தனுஷுடன் நடிக்க வேண்டும் என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார். அடுத்த வாரமே அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்திருப்பதை அறிவித்தது 'மாறன்' படக்குழு.
"இதில் அவர் புகைப்படச் செய்தியாளராக நடித்துள்ளார். அவரது திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புள்ள படம் இது. அவரும் இதைப் புரிந்துகொண்டு காட்சிகளையும் வசனங்களையும் நன்கு உள்வாங்கி நடித்துள்ளார்.
"மொழி தெரிந்த நடிகையாக இருந்தால் படப்பிடிப்பின்போது காட்சியை மெருகேற்றினால் அதைப் புரிந்துகொண்டு நடிக்க முடியும்.
"ஆனால் மாளவிகாவுக்கு மொழி கொஞ்சம் தடையாக இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ள மாட்டார். 'எனக்கு பத்து நிமிடங்கள் கொடுக்க முடியுமா' என்று கேட்டு நேரம் எடுத்துக் கொள்வார்.
"சொன்னபடியே பத்து நிமிடங்களுக்குள் மெருகேற்றப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்து வந்து, அருமையாக நடிப்பார்," என்று சொல்லும் கார்த்திக் நரேன், 'மாறன்' என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு படம் வெளியாகி இருப்பது தமக்குத் தெரியும் என்கிறார்.
இவரது கதையின் நாயகனுடைய பெயர் மதிமாறன். நாயகனின் பெயரைத்தான் படத்தலைப்பாக வைக்க வேண்டும் என்று தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டனராம்.
"மதி என்றால் அறிவு என்று ஒரு பொருள் உண்டு. எனது பட நாயகன் ஒரு செய்தியாளர். அவனது சாதுரியமும் புத்திசாலித்தனமும்தான் படத்தின் சிறப்பம்சம். அதனால்தான் 'மாறன்' என்ற தலைப்பைத் தேர்வு செய்தோம்.
"இந்தப் படத்துக்கு மலையாள எழுத்தாளர்கள் சர்ஃபூ, சுஹாஸ், பாடலாசிரியர் விவேக் என்று மூன்று பேர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.
"முதன் முறையாக இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்," என்கிறார் கார்த்திக் நரேன்.

