இனி திரைப்படங்களில் நடிப்பதுடன், அவற்றுக்கு இசையமைக்கவும் கணிசமான நேரத்தை ஒதுக்கப்போவதாகக் கூறுகிறார் நடிகர் ஜெய். தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'சிவசிவா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சுசீந்திரனின் அடுத்த படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளர். மொத்தம் ஆறு பாடல்களுக்கு மெட்டமைத்துள்ளாராம்.
"சுசீந்திரன் சார் படம் இயக்கும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் இயக்கிய 'நான் மகான் அல்ல' படத்தைப் பார்த்துட்டு, ஒருமுறையாவது அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒருநாள் தொடர்பு கொண்டார். உடனடியாக திண்டுக்கல் பகுதிக்கு வருமாறு கூறினார். என்ன, ஏது என்று எதுவுமே கேட்காமல் அவர் முன்னே போய் நின்றேன்.
"அங்குதான் படத்தின் கதையை விவரித்தார். எனக்கும் பிடித்திருந்தது. உடனே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதுதான் 'குற்றம் குற்றமே' படம். அவரிடம் தனிப்பட்ட வகையிலும் தொழில் ரீதியிலும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இந்தப் படம் முடிந்தவுடன் இன்னொரு முறை கூட்டணி அமைப்போமா என்றார். அதுதான் 'சிவசிவா.'
"இரு மொழிகளில் தயாராகும் படம். தெலுங்குப் பதிப்பில் ஆதியும் நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். தமிழில் நானும் மீனாட்சியும் நடிக்கிறோம்.
"படப்பிடிப்பு தொடங்கியது, முடிந்தது என்று எதுவுமே தெரியவில்லை. அந்த அளவுக்கு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்தார் சுசீந்திரன் சார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பின்போது, நாம் மீண்டும் இணைவோம் என்று அவர் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
"திண்டுக்கல் படப்பிடிப்பின்போது அங்கிருந்த ஒரு மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து நான் ஏற்கெனவே இசையமைத்த ஒரு பாடலை கைபேசியில் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த சுசீந்திரன் சாருக்கு அந்தப் பாடல் பிடித்துப்போனது. பெரிய இசையமைப்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் இசையமைத்த பாடலா என்று கேட்டார். நான்தான் இசையமைத்தேன் என்றதும் அவருக்கு வியப்பு.
"அந்த இடத்திலேயே தனது அடுத்த படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர் என்று முடிவு எடுத்துவிட்டார். எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் அவரோ, ஆறு பாடல்கள் இருப்பதாகவும் அவற்றுக்கு மெட்டமைக்குமாறும் கூறினார். அவர் தந்த உற்சாகத்தில் ஆறு பாடலையும் தயார் செய்துவிட்டேன்," என்கிறார் ஜெய்.
இசையமைப்பாளர் ஆக வேண்டும் என ஏதோ ஆர்வக்கோளாறில் முடிவெடுக்கவில்லை ஜெய். லண்டனில் உள்ள ட்ரினிடி இசைக்கல்லூரியில் படித்தவராம். மேற்கத்திய இசையில் ஐந்தாவது படிவம் (கிரேட்) வரை முடித்துள்ளார்.
"முறைப்படி இசை கற்றாலும், இசைத்துறையில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் இசையமைப்பாளர் தேவாதான். அவர் எனது உறவினர். அவரை அப்பா என்றுதான் குறிப்பிடுவேன். அவருடனும் ஸ்ரீகாந்த் (தேவாவின் மகன்) அண்ணனுடனும் ஒலிப்பதிவுக் கூடத்தில் இருக்கும்போதே அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் எனக் கவனிப்பேன்.
"நடிப்பு மட்டுமல்ல, எனக்கு இசையும் வேண்டும். கீ போர்ட் வாசிப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதில் மூழ்கிப் போவேன். சில மெட்டுக்களைப் போட்டு இருவரிடமும் கருத்து கேட்பேன். சில திருத்தங்களைச் சொல்வார்கள். அதைவிட, எனது முயற்சியை மிகவும் பாராட்டுவார்கள். தவறுகளைத் திருத்திக் கொண்டு பக்குவமான இசையமைப்பாளராக மாறியிருப்பதாக நம்புகிறேன்," என்கிறார் ஜெய்.
அண்மைய காலமாக இவரைப் பற்றி கிசுகிசுக்கள் ஏதும் வெளியாவதில்லை. மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியதால், கிசுகிசுக்களை மறந்து போயிருக்கலாம் என்கிறார்.
"என்னைப் பற்றிய பல கிசுகிசுக்கள் வந்துள்ளன. அவற்றில் சில உண்மைதான். மற்றவை பொய்யானவை. அதேசமயம் கிசுகிசுக்கள்தான் ரசிகர்கள் நம்மை மறக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது.
"நான் ஏன் பேட்டிகள் கொடுப்பதில்லை என்றும் கூட பலரும் கேட்கிறார்கள். பேட்டிகளின் போது உண்மையைப் பேச வேண்டுமா அல்லது பொய் சொல்ல வேண்டுமா? என்ற குழப்பம் வந்துவிடுகிறது. எனவேதான் தவிர்த்துவிடுகிறேன்," என்று சொல்லும் ஜெய், திருமணப் பேச்சை எடுத்தால் மட்டும் நழுவப் பார்க்கிறார்.
முன்பு திருமணம் குறித்து கேள்வி எழுப்பினால், "நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்ளட்டும். அதன் பிறகு நான் திருமணக் கோலத்தில் நிற்பேன்," என்பார். இப்போது ஆர்யாவுக்குத் திருமணமாகிவிட்டதால் சிக்கிக்கொண்டார்.
"ஆர்யா... நிச்சயமாக திருமணம் செய்யமாட்டார் என நம்பினேன். திடீரென திருமணம் என அறிவித்து விட்டார். இப்போது நான் சுதாரித்துவிட்டேன். நடிகர் சிம்புவின் திருமணத்துக்குப் பிறகுதான் என்னை மணக்கோலத்தில் பார்க்க முடியும்," என்கிறார் ஜெய்.

