பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியீடு கண்ட பெரும்பாலான படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகாத காரணத்தால் ரசிகர்களிடம் உற்சாகம் இல்லை. அதனால் திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவர்களிடம் ஏற்படவில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.
இம்முறை பொங்கலையொட்டி 'கார்பன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'நாய் சேகர்' ஆகிய படங்கள் கடந்த 13ஆம் தேதி வெளியீடு கண்டன. 14ஆம் தேதியன்று 'தேள்', 'பாசக்காரப்பய' ஆகிய இரு படங்கள் வெளியாகின. எனினும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லையாம்.
சில ஊர்களில் போதுமான ரசிகர்கள் திரையரங்குக்கு வராததால் புதுப்படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதிலும் முதல் நாளன்று, முதல் காட்சியே ரத்தானதாக வெளிவரும் தகவல்கள் கோடம்பாக்கத்தினருக்கு கவலையும் அதிர்ச்சியும் அளித்துள்ளன.

