பதினெட்டு ஆண்டுகால திருமண வாழ்வுக்குப் பிறகு, மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் இருந்து பிரிவதாக நடிகர் தனுஷ் அறிவித்திருப்பது திரையுலகினர், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
தாங்கள் இருவரும் பிரிவதாக தனுஷும் ஐஸ்வர்யாவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். தனுஷ் தரப்பில் இந்தச் செய்தி வெளியானவுடன் அவருடைய ரசிகர்கள் மனமுடைந்து போயினர். ஐஸ்வர்யாவின் தந்தை நடிகர் ரஜினிகாந்துக்கு இணையவாசிகள் ஆதரவு கூறி வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ரசிகர் ஒருவர், “சௌந்தர்யா (ரஜினியின் இரண்டாவது மகள்) மணமுறிவு செய்துகொண்டபோது ரஜினி உணர்வுபூர்வமாக பாதிக்கப்பட்டிருந்தார் எனக் கேள்விபட்டேன். இப்போது அவருடைய மூத்த மகளுக்கு மணமுறிவு. தைரியமாக இருங்க தலைவா,” என்று கூறினார்.
மற்றொரு ரசிகர் கூறுகையில், “இது சற்றும் எதிர்பார்க்கப்படாதது, அதிர்ச்சியளிக்கிறது! அவர்களுடைய மணமுறிவுக்கான காரணங்கள் நமக்குத் தேவையில்லாதது. இதிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கான அவகாசத்தை ரசிகர்கள் வழங்க வேண்டும். தனுஷ், ஐஸ்வர்யாவின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.