மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். இவரது நடிப்பில் 'கடமையை செய்' என்ற படம் உருவாகி உள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து மீண்டு வந்துள்ள தமக்கு, இந்தப் படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது என்கிறார். முதன்முறையாக ஐந்து வயது குழந்தையின் தாயாக நடித்துள்ளாராம்.
"வழக்கமாக நவீன ஆடைகளை தான் அணிவேன். அவைதான் எனது அழகையும் கவர்ச்சியையும் சரியாக வெளிப்படுத்துகின்றன என்று தோழிகள் கூறுவதுண்டு.
"ஆனால் இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் புடவையில்தான் என்னைப் பார்க்கமுடியும். கதாபாத்திரத்துக்குத் தேவைப்பட்டதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், சில காட்சிகள் எனது மன உணர்வுகளை வெளிப்படுத்துவது போல் அமைத்திருந்தன. தவிர, பல தருணங்களில் கண்களால் மட்டுமே சில உணர்வுகளை மற்ற கதாபாத்திரங்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது.
"பொதுவாக நான் அமைதியான பெண். அதிகம் பேசுவதை விரும்பமாட்டேன். ஆனால், இந்த வேடத்தில் நீளமான வசனங்களைப் பேசி நடிக்க வேண்டி இருந்தது.
"அதேபோல் எனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிய பிறகு, வீட்டில் சமையல் வேலைகளைக் கவனிப்பதுபோன்று சில காட்சிகள் படமாக்கப்பட்டன. நான் இதுவரை சமையலறை பக்கமே போனதில்லை. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தேன். பிறகு அம்மா சமையல் செய்வதை நினைத்துப் பார்த்தேன். அந்த நினைவுகளை வைத்து சமாளித்து நடித்தேன்," என்று படப்பிடிப்பு அனுபவத்தை விவரித்துச் சிரிக்கிறார் யாஷிகா.
எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் நடிக்கிறார் என்பதை அறிந்ததும் சற்றே படபடப்பாக உணர்ந்தாராம்.
"அவர் எப்படி நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது வேகத்துக்கும் நடிப்புக்கும் தம்மால் ஈடுகொடுக்க முடியுமா என்ற கவலையும் சேர்ந்து கொண்டது. ஆனால் அவரோ எனது தவிப்பை புரிந்துகொண்டார். முக்கியமான காட்சிகளைப் படமாக்கப் போகிறோம் என்றால், அதற்கு முந்தைய நாளே என்னைத் தொடர்புகொண்டு பேசுவார். இதனால் எனது பதற்றம் குறைந்தது.
"இந்தப் படம் எனக்கு வேறு சில அனுபவங்களையும் தந்துள்ளன. கடற்கரையில் வெயில் அடிக்கும்போது சில காட்சிகளை எடுத்தனர். சூரிய வெளிச்சம் போதாது என்று சிறப்பு விளக்குகளையும் பயன்படுத்தினர். அவை கண்களை கூசச் செய்யும்.
"இன்னொரு காட்சியில் எங்கு திரும்பினாலும் புகைமூட்டமாக இருக்கும். இதனால் கண்களில் கடும் எரிச்சல் ஏற்பட்டது. காதுகள் அடைத்துக்கொண்டன. "எனினும் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்பதால் பொறுத்துக்கொண்டேன். என் உழைப்பு வீண் போகாது என உறுதியாக நம்புகிறேன்," என்கிறார் யாஷிகா.
, :

