காதலித்து மணம் புரிந்த நடிகர் தனுஷும் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் மணவாழ்வில் நீடிக்க இயலாததால் நண்பர் களாகப் பிரிவது என முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக இருவருமே நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இதனால் திரையுலகத்தினரும் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமானவர்களும் கடும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து மணம் புரிந்தனர். தனுஷ் அப்போது தமிழ்த் திரையுலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். திருமணமானபோது தனுஷுக்கு 22 வயதும் ஐஸ்வர்யாவுக்கு 23 வயதும் ஆகியிருந்தது. இத்தம்பதியர்க்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
ரஜினியின் மருமகன் என்ற போதிலும், அவரது பெயரைப் பயன்படுத்தாமல் தனுஷ் தனது திறமையாலும் உழைப்பாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார்.
அதேபோல் ஐஸ்வர்யாவும் திரைப்பட இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இருவரும் மனமொத்த தம்பதியராக வலம்வந்தனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், தனுஷும் தானும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருந்துள்ளது என்று ஐஸ்வர்யா குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், தனுஷும் தமது பேட்டிகள், சமூக வலைத்தளப் பதிவுகளில் தன் மனைவி குறித்து உயர்வாகவே குறிப்பிடுவார். தனுஷ் குறித்து அவ்வப்போது சில கிசுகிசுக்கள் வெளிவந்தபோதிலும், அதுகுறித்து ஐஸ்வர்யா வெளிப்படையாக கருத்து ஏதும் தெரிவித்ததில்லை.
குறிப்பிட்ட சில நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாகப் பழகுவதாகவும் தனது படங்களில் தவறாமல் முத்தக் காட்சிகள் இடம்பெறுவதை அவர் உறுதி செய்துகொள்வதாகவும் கூட ஒரு தகவல் வெளியானது. தனுஷ் இதுகுறித்து பேசியது இல்லை.
தேசிய விருதுகள், இந்திப்பட வாய்ப்புகள், ஹாலிவுட்டில் அறிமுகம் என்று அடுத்தடுத்த மைல்கற்களை எட்டிய வண்ணம் உள்ளார். இதன் மூலம் ரஜினியின் அபிமானத்தையும் அன்பையும் அவர் பெற்றிருந்ததாகவே கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.
ரஜினியைவிட அவரது மனைவி லதா, தனுஷிடம் ஒரு தாயைப் போல் அன்பு பாராட்டியதாகவும் ரஜினி வீட்டில் அவரது மகனைப் போல் தனுஷ் வலம்வந்ததாகவும் கூட விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
சுமார் 18 ஆண்டுகள் நட்சத்திர தம்பதியராக வலம்வந்த தனுஷும் ஐஸ்வர்யாவும் திடீரென பிரிந்து வாழப்போதாகக் கூறியுள்ளதற்கான துல்லியமான காரணம் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் இரவு இருவரும் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
"கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும் பெற்றோராகவும் ஒன்றாகப் பயணித்தோம். தற்போது நானும் ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாகப் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்," என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினியை மீறி எவ்வாறு இது நடந்தது? ரஜினியின் மனநிலை என்ன? என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
ஆனால், ரஜினி, தனுஷ் ஆகிய இருவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது சமூக வலைத்தளப் பதிவுகளில் இதை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஏற்கெனவே ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்து மறுமணம் புரிந்துள்ளார்.
மகளின் விவாகரத்து காரணமாக ரஜினி வேதனை அடைந்ததாகவும் திரைப்படங்களில் நடிப்பதுதான் அவருக்கு ஆறுதல் அளித்தது என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.
"கலங்காதே தலைவா... நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்... ஐஸ்வர்யா, தனுஷின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகள்," என்று பலவிதமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றன. ரஜினி குடும்பத்தாரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் தனுஷ், ஐஸ்வர்யா எடுத்துள்ள முடிவு குறித்து திரையுலகத்தினர் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. ரஜினி, தனுஷ் தரப்புகளும் இதைத்தான் விரும்புகின்றன.