தனுஷுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என தாம் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் சம்யுக்தா மேனன்.
'களரி', 'ஜூலைக் காற்றில்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்த இவர், இப்போது தனுஷ் நடிக்கும் 'வாத்தி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால்பதித்துள்ளார்.
"தமிழில் நல்ல தொடக்கம் அமைந்தது. ஆனாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையவில்லை.
"முன்னேறி வரும் நடிகர், நடிகைகளைக் கொண்டு குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள், முற்றிலும் புதிதாக, வித்தியாசமாக இல்லை என்றால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடிவதில்லை. நான் நடித்த முதல் இரண்டு தமிழ்ப் படங்களுக்கும் அதுதான் நடந்தது.
"அப்படங்களின் தோல்வி மிகுந்த வருத்தத்தை தந்தது. அதன் பிறகு பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
"இப்போது கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர் தனுஷ். அவருடன் இணைந்து நடிப்பதில் பெருமைப்படுகிறேன். 'வாத்தி' கதை அவரது திறமைக்கு ஏற்ற கதை. எனக்கும் நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது. இதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும்," என்கிறார் சம்யுக்தா.
பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தாலும் சம்யுக்தாவால் தமிழில் சரளமாகப் பேச முடிகிறது. பொருளாதாரம் தொடர்பான பட்டப்படிப்பை முடித்துள்ளார். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகமாம். நிறைய படங்கள் பார்ப்பாராம். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க வேண்டும், பெரிய நடிகையாகப் பெயரெடுக்க வேண்டும் என்பதே தமது கனவாக இருந்தது என்கிறார்.
"நான் எதை விரும்பினேனோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். விரும்பியது கிடைத்ததும் அதை தக்க வைத்துக்கொண்டதும் என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம். அந்த வகையில் என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்," என்று சொல்லும் சம்யுக்தா, பெண்கள் எப்போதுமே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிறார்.
அத்தகைய பெண்களை தாம் பெரிதும் மதிப்பதாகவும் சொல்கிறார். அனைவரையும் சமமாக நடத்துபவர்களையும் தன்னம்பிக்கையுள்ள பெண்களையும் தமக்கு ரொம்பப் பிடிக்கும் என்று குறிப்பிடுபவர், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் பேசுவதுதான் தமது இயல்பு என்கிறார்.
"நான் சட்டென உணர்ச்சிவசப்படக் கூடியவள். அதேசமயம் துடுக்காகவும் பேசுவேன். எப்போதும் துணிச்சலாகச் செயல்படுவது என் வழக்கம். அதற்காக அசட்டுத் துணிச்சல் என்று நினைத்துவிட வேண்டாம். எல்லோரையும் சமமாகப் பார்ப்பேன்," என்கிறார் சம்யுக்தா.
முத்தக்காட்சியில் நடித்ததால் எழுந்துள்ள சர்ச்சை குறித்து?
"மலையாளத்தில் வெளிவந்த 'தீ வண்டி' படத்தில் முத்தமிடும் காட்சியில் நடித்தது குறித்து சமூக வலைத் தளங்களில் ஏராளமானோர் பதிவிடுகின்றனர். அது தேவையற்ற காட்சி அல்ல.
"அந்தப் படத்தில் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அந்த முத்தம் என்று படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள்.
"கதையின் முக்கிமான பகுதியாக முத்தக்காட்சி இருந்தால் யார் நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் நடிக்க நான் தயார்," என்கிறார் சம்யுக்தா.
"படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறும்போது எனது கதாபாத்திரத்தின் மனநிலையை, உடைகளைக் கழற்றி வைப்பதுபோல் அந்த அரங்கிலேயே கழற்றி வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.
"இப்போது அதற்குப் பழக்கப்பட்டு விட்டேன். அதனால் கிசுகிசுக்களும் நியாயமற்ற விமர்சனங்களும் என்னைப் பாதிப்பதில்லை," என்று சம்யுக்தாவின் விளக்கம் தெளிவாகவும் கச்சிதமாகவும் உள்ளது.
தாம் நடித்த படங்கள் வசூல் ரீதியில் தோல்வி அடையும்போது வருத்தத்தில் மூழ்கிவிடுவார் சம்யுக்தா. அதன் பின்னர் புதுப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிய பிறகுதான் இயல்பு நிலைக்கு தம்மால் திரும்ப முடியும் என்கிறார்.
"வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பார்கள். அது சரிதான். எனினும் ஒரு படைப்புக்காக கடுமையாக உழைத்த பிறகு அதற்கான வரவேற்பும் பலனும் கிடைக்காமல் போகும்போது நிச்சயம் மனம் வலிக்கும்," என்பதே சம்யுக்தாவின் பதில்.
'வாத்தி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தனது காட்சிகளுக்காக காத்திருக்கிறார்.

