அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட 'புஷ்பா' படத்தின் பாடல்கள் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
அனைத்து மொழிகளிலும் இந்தப் பாடல்கள் இணையத் தளங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது என இவற்றின் உரிமையைப் பெற்றுள்ள ஆதித்யா மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக ஒரு படத்தை பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடும்போது, அதில் இடம்பெற்றுள்ள பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது.
எப்போதோ ஒரு முறைதான் மொழிமாற்றம் செய்யப்படும் பாடல்கள் பிற மொழி ரசிகர்களைக் கவரும். அந்த வகையில், நேரடித் தெலுங்குப் படமான 'புஷ்பா' படப் பாடல்கள் தமிழ், கன்னடம் உள்ளிட்ட பிறமொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளன.
'புஷ்பா' படத்தில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்திய 'ஓ சொல்றியா...' என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இதேபோல் 'சாமி சாமி' பாடலை தமிழில் ராஜலட்சுமி பாடினார். இப்பாடலுக்கு ராஷ்மிகாவின் நடன அசைவுகள் கச்சிதமாகப் பொருந்தி இருந்தன.
இந்நிலையில், இந்தப் பாடல்களுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வேறு எந்த தென்னிந்திய மொழிப் படமும் இதுவரை சாதிக்காத வகையில், 'புஷ்பா' படப் பாடல்கள் ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பது பெரும் சாதனை என்கிறது அப்படக்குழு.
, :