'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்களில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர். அதே சமயம் மற்றவர்களைவிட அதிக பட வாய்ப்புகள் கிடைப்பதும் இவருக்குத்தான்.
'சிண்ட்ரெல்லா' படத்தில் வில்லியாக நடித்து, ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த சாக்ஷி, தற்போது 'தி நைட்', 'புரவி' உட்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.
"முதன்முறையாக ஓர் ஆங்கிலப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளேன். '120 அவர்ஸ்' என்ற தலைப்பில் உருவாகும் அந்தப் படம் வெளியானதும் என் திரைப்பயணத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
"பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகுதான் எனக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதாக சிலர் கூறுவதை ஏற்க இயலாது.
"காரணம், அந்த நிகழ்ச்சிக்கு முன்பே நான்கு புதுப்படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். அவை கொரோனா பிரச்சினைக்குப் பிறகு இப்போதுதான் தயாராகி வருகின்றன. படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன," என்கிறார் சாக்ஷி அகர்வால்.
கடந்த எட்டு மாதங்களில் இவர் நடித்த 'டெடி', 'சிண்ட்ரெல்லா', '4 சாரி', 'அரண்மனை 3' ஆகிய நான்கு படங்கள் வெளியாகி, நான்குமே வெற்றியும் பெற்றுள்ளன. 'சிண்ட்ரெல்லா' படத்துக்குப் பிறகு இவரால் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தும் படங்களில் சிறப்பாக பங்காற்ற முடியும் என்று பலரும் நம்புவதாகச் சொல்கிறார்.
'தி நைட்' படத்தில் காட்டுக்குள் திரியும் ஓநாய் ஒன்றைத் தேடிச் செல்லும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
"விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான உணர்வுகளை மையமாக வைத்து, இந்தப் படத்தின் கதையை எழுதி திகில் நிறைந்த படைப்பாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் புவனேஷ்.
"தமிழ் சினிமாவுக்கு இது முற்றிலும் புதிய கதைக்களமாக இருக்கும். 80 விழுக்காடு படப்பிடிப்பு கேரளக் காடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. அதேபோல் 'புரவி' படத்தில் அதிரடி நாயகியாக நடித்து வருகிறேன். இதில் பல சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
"வெங்கட்பிரபுதான் 'குட்டி ஸ்டோரி' என்ற 'ஆந்தாலஜி' வகைப் படத்தில் என்னை நடிக்க வைத்தார். அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள '4 சாரி' 'ஆந்தாலஜி' படத்திலும் நடித்துள்ளேன்.
"இனி இந்த வகைப் படங்களில் தொடர்ந்து நடிப்பது என முடிவு செய்திருக்கிறேன். காரணம், இதில் வேலை குறைவு, வரவேற்பு அதிகம்," என்று சொல்லும் சாக்ஷி அகர்வால், சில பெரிய படங்களில் சிறிய வேடங்களை தாம் ஏற்றதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்.
ரஜினி, அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்கவேண்டும் என்பது தமது நீண்ட நாள் கனவு என்று குறிப்பிடுபவர், அத்தகைய வாய்ப்பு கிடைக்கும்போது அது முக்கியத்துவம் வாய்ந்த வேடமா இல்லையா என்பதை எல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை என்கிறார்.
"உச்ச நடிகர்களுடன் திரையில் தோன்றுவதும் நமது பிறந்தநாளுக்கு அவர்கள் வாழ்த்து சொல்வதும் எல்லோருக்கும் அமைந்துவிடாது. எனக்கு அத்தகைய வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி.
"ஆர்யா படத்திலும் சிறு வேடத்தில் நடித்துள்ளேன். அவர் ஒரு நல்ல நண்பரைப் போல் பழகக் கூடியவர். எனவே, சிறு வேடங்கள் என்று கருதி கவலைப்படுவதைவிட, யாருடன் திரைவெளியைப் பகிர்ந்துகொண்டோம் என்பதும் அந்தப் படங்கள் எத்தனை பெரிய வெற்றியைப் பெற்றன என்பதும்தான் முக்கியம். எனக்கு இதுவே போதும்," என்று பக்குவமாகப் பேசுகிறார் சாக்ஷி.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள 'பகீரா' படத்தில் ஆறு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், பாலிவுட் நிறுவனமான ஹங்கமா, தமிழில் தயாரிக்கும் இணையத் தொடரிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இத்தொடரில் இவர்தான் கதாநாயகியாம்.
"ஆறு பேரில் ஒருவராகவும் தனி நாயகிஎனவும் மாறுபட்டு நடிக்க நான் தயார். காரணம், நான் முன்பே சொன்னது போல் எனக்கு இது போதும்," என்கிறார் சாக்ஷி.
சாக்ஷி அகர்வால்