'ஒரு குப்பைக் கதை' படம் வசூல் ரீதியில் பெரிதாக சாதிக்கவில்லை என்றாலும், தனது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டதில் மனநிறைவு அடைந்ததாகச் சொல்கிறார் மனிஷா யாதவ்.
தற்போது ரமணி சங்கர் இயக்கும் 'கருட சுற்று' படத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர், மேலும் இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
"வணிக ரீதியிலான படங்களில் நான் நடிப்பதில்லை என்று சிலர் குறை கூறுகிறார்கள். அது தவறு. வணிகப் படங்களில் நடிக்க நான் தயங்குவதில்லை. ஆனால், அதுபோன்ற கதைகள், கதாபாத்திரங்களுக்கு மத்தியில் சவாலான வேடங்களுக்கும் இடமளிக்க வேண்டும்.
"எனது முதல் படமான 'வழக்கு எண் 18/9' வெளியாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. என்னை அறிமுகப்படுத்திய கையோடு, படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார் சொன்ன அறிவுரையை இன்று வரை மறக்கவில்லை.
"எந்த வேடமாக இருந்தாலும், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்க வேண்டும். இல்லையெனில், அந்த கதாபாத்திரத்தில் நடித்து பலன் இல்லை என்றார். ஒரு மாணவியாக அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்," என்று சொல்லும் மனிஷா, 'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்தபோது கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தாராம்.
அதனால் பள்ளி மாணவி வேடத்துக்கு தாம் பொருத்தமாக இருப்போமா என்று சந்தேகப்பட்டுள்ளார். ஆனால், பாலாஜி சக்திவேலோ காணொளி வசதி மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது மனிஷாவின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, 'நீதான் என் படத்துக்குப் பொருத்தமான நாயகி' என்று கூறினாராம்.
முதல் படம் நல்ல பெயர் வாங்கிக்கொடுத்த பிறகு படங்களைத் தேர்வு செய்ததில் தாம் சில தவறுகளைச் செய்துவிட்டதாகச் சொல்கிறார் மனிஷா. அதனால்தான் தம்மால் முன்னணி நாயகியாக வளர முடியவில்லை என்கிறார்.
"அண்மையில் சென்னை வந்திருந்தபோது இயக்குநர் பாலாஜி சக்திவேலைச் சந்தித்தேன். அப்போது 'ஒரு குப்பைக் கதை' படத்தில் நடித்ததற்காகப் பாராட்டினார். இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களைத் தயக்கமின்றி ஏற்க வேண்டும் என்றும் அவர் சொன்ன அறிவுரையை நான் பின்பற்றுவதற்காக வாழ்த்துவதாகவும் கூறினார்.
"பல நடிகைகள் 'ஒரு குப்பைக் கதை' படத்தில் நடிக்கத் தயங்கினர். சில நடிகைகள் கதையைக் கேட்கும் முன்பே நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாக அறிந்தேன். ஆனால், அந்த கதையைக் கேட்டதும், இது எனக்கான படம் என்று தோன்றியது.
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அந்தப் படம் எனது திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பேன். இப்போது பெங்களூரு வரை என்னைத் தேடி வந்து பல இயக்குநர்கள் கதை சொல்கிறார்கள். நான் கேட்கும் சம்பளம் கிடைக்கிறது. இந்த நிலையை சாத்தியமாக்கியது அந்தப் படம்தான்," என்கிறார் மனிஷா யாதவ்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும், சூர்யாவுடன் ஜோடி சேர வேண்டும், வணிக ரீதியான படங்களிலும் நடிக்க வேண்டும் என்று இவரது விருப்பப் பட்டியல் சற்று நீளமாகத்தான் உள்ளது. அண்மையில் 'ஜெய் பீம்' படம் பார்த்தாராம். முதன்முறை பார்த்தபோது ஏற்பட்ட தாக்கம், அடுத்தடுத்து மூன்று முறை இப்படத்தைப் பார்த்தபோதும் நீடித்ததாம்.
"சூர்யா சாரின் நடிப்பு உண்மையில் என்னை மிரள வைத்துவிட்டது. ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவர் திரையுலகை எந்த அளவு நேசிக்கிறார் என்பதை படம் பார்த்தபோது என்னால் உணர முடிந்தது. இந்த விஷயத்தில் நான் அவரைப் பின்பற்ற விரும்புகிறேன். ஏனெனில் அவரைப் போலவே நானும் சினிமாவை அளவுக்கதிகமாக நேசிக்கிறேன். இது போன்ற படங்கள்தான் ரசிகர்களையும் திரைத்துறையை நேசிக்கத் தூண்டும்," என்கிறார் மனிஷா.
, :
மனிஷா யாதவ்