'மாநாடு' படத்தின் வெற்றி, சிம்புவை உற்சாகப்படுத்தி புது வேகத்தையும் தந்துள்ளது.
தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இதையடுத்து 'பத்து தல', 'கொரோனா குமார்' என அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளையும் ஒருசேர கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல். ஒற்றை இலக்கத்தில் சம்பளம் வாங்கியவர், அண்மைய வெற்றிக்குப் பிறகு அதை இரட்டை இலக்கங்களாக ஏற்றிவிட்டாராம்.
இந்நிலையில், அண்மையில் 'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவிடம் கதை கேட்டுள்ளார் சிம்பு. அது பிடித்துப்போகவே, கால்ஷீட் ஒதுக்க முடிவு செய்துள்ளாராம். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பது என முடிவாகி உள்ளது.
அஷ்வத் மாரிமுத்து தமிழில் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த பிறகும், யாரும் எதிர்பாராத வகையில் தெலுங்குப் படம் இயக்க சென்றுவிட்டார். எனவே, தமிழில் அவர் அடுத்து இயக்கப்போகும் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அவர் சிம்புவை வைத்து படம் இயக்குகிறார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும், தன் மகனுக்கு மினி கூப்பர் ரக காரை பரிசளித்துள்ளார் சிம்புவின் தாயார். இந்தப் பரிசை தாம் எதிர்பார்க்கவில்லை. 'நீண்ட நாள்களுக்குப் பிறகு அம்மா தந்துள்ள பரிசு இது' என்று சொல்லி மகிழ்கிறாராம் சிம்பு.