திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் தமக்கு இருந்ததில்லை என்றும் ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே தமது விருப்பமாக இருந்தது என்றும் சொல்கிறார் கௌரி கிஷன்.
'96', 'மாஸ்டர்' படங்களில் இவரது நடிப்பு இளையர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்நிலையில், கதாநாயகியாக நடிக்கத் தயாராகி வருகிறாராம் கௌரி.
"சென்னையில்தான் பள்ளிப்படிப்பை முடித்தேன். அதனால் மலையாளம் தாய்மொழி என்றாலும் தமிழில் என்னால் சரளமாகப் பேச முடிகிறது. ஊடகவியல் துறையில் படிப்பை முடித்ததும் சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளராகப் பணியாற்ற வேண்டும் என்பதும் சிறந்த கட்டுரையாளராக வேண்டும் என்பதுமே எனது கனவாக இருந்தது.
"ஆனால், கல்லூரியில் படித்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. சினிமாவும்கூட ஊடகத்துறையின் பிரிவுதான் என்று பலரும் கூறியதால், இன்று நடிகையாக உருவெடுத்திருக்கிறேன்," என்கிறார் கௌரி.
தமிழில் தற்போது ஜெகன் விஜயமுத்து இயக்கும் படத்தில் இவரும் வினோத் கிஷனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலை 'உலகம்மை' என்ற தலைப்பில் படமாக எடுக்க உள்ளனர். பாரதிராஜாவின் உதவியாளர் விஜய் பிரகாஷ் இயக்கும் அந்தப் படத்தில், கௌரிதான் கதாநாயகி.
"இதைத் தவிர, கிருத்திகா உதயநிதி இயக்கும் இணையத் தொடரில் காளிதாஸ் ஜெயராமுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் கௌரி.
"நான் இன்னும் சின்னப் பெண்ணாகவே இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். மேலும், எனது அப்பாவித்தனமான தோற்றத்தைப் பார்த்து அதற்கேற்ற மென்மையான கதாபாத்திரங்களையே தர விரும்புகிறார்கள். இப்போது கொஞ்சம் பெரிய பெண்ணாக ஆகிவிட்டதாக நினைக்கிறேன். அதனால், எனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்கள் அமைய பொறுமையுடன் காத்திருக்கிறேன்.
"திரைத்துறையில் அவசரப்பட்டால் எதையும் சாதிக்க இயலாது," என்கிறார் கௌரி.
கௌரி கிஷன்