'பேட்ட' படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை மையப்படுத்தி சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக மலேசிய நிறுவனம் ஒன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி மீது சென்னை காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
அந்நிறுவனம் 'பேட்ட' படத்தின் விநியோக உரிமை தங்களிடம் இருப்பதாகக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக மலேசியாவைச் சேர்ந்த 'மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம் கூறுகிறது.
பணம் கொடுத்த பிறகுதான் தேனாண்டாள் நிறுவனத்திடம் குறிப்பிட்ட உரிமை இல்லை என்பது தெரிய வந்ததாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்து கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
"கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 15 கோடி ரூபாய்க்கு 5 கோடி ரூபாய்க்கு முன்தேதியிட்ட காசோலையும் மீதமுள்ள 10 கோடிக்கு 'காஞ்சனா 3', 'நான் ருத்ரன்' திரைப்படங்களின் விநியோக உரிமையைத் தருவதாகவும் கூறி மீண்டும் ஒப்பந்தம் செய்துகொண்டார் முரளி.
"ஆனால், 'காஞ்சனா 3' படத்தின் விநியோக உரிமையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும் 'நான் ருத்ரன்' படம் இயக்கப்படாமலேயே கைவிடப்பட்டதும் தெரியவந்தது. மேலும், 5 கோடிக்கான காசோலையும் முரளியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது," என்று மலேசிய நிறுவனம் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.