காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் உட்கார்ந்து அதுகுறித்து வேதனைப்படவில்லை.
மாறாக, காதல் பாடல் ஒன்றை இயக்க ஹைதராபாத்துக்குச் சென்றுவிட்டார் அவர்.
அங்கு அவர் தம்முடைய படக்குழுவினருடன் சேர்ந்து உரையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியின் திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்துவிட்டது. பிரிவை அறிவித்த கையோடு இப்படி காதல் பாடலை இயக்குவதற்கான தனி தைரியம் ஐஸ்வர்யாவிடம் இருப்பது ரசிகர்களை வெகுவாக வியக்கவைத்துள்ளது.
“வேதனையோடு இருக்கும் இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவால் எப்படிதான் காதல் பாடலை இயக்க முடிகிறதோ? நினைத்துப் பார்க்கவே சிரமமாக இருக்கிறது. ஐஸ்வர்யாவை நினைத்து அழுவதா, பெருமைப்படுவதா என்றே தெரியவில்லை,” என்று ரஜினி ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
பிரிவை நினைத்து சங்கடப்படாமல் தம்மை எப்போதும்போல பரபரப்பாக வைத்திருக்கும் ஐஸ்வர்யாவை ரசிகர்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.
காதல் உணர்வுகளைத் திரையில் அழகாக காட்டுவதில் ஐஸ்வர்யா வல்லவர் என்பது தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
அந்த வகையில், தனுஷை வைத்து அவர் இயக்கிய ‘3’ படத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
இதற்கிடையே, காதல் பாடலை இயக்க சித்தாரா ஹோட்டலில் ஐஸ்வர்யா தங்கியிருப்பதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
‘வாத்தி’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் தனுஷும் அதே ஹோட்டலில்தான் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பது தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் தெரியுமாம். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.