இயக்குநர் மிஷ்கின் தன் முதுகில் குத்துவார் என்று தாம் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார் விஷால்.
அவரைப் போலவே மேலும் சிலரும் விஷாலை ஏமாற்றிவிட்டதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.
"துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக மிஷ்கினை நம்பி நிறைய செலவு செய்தேன். கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய் செலவிட்ட பிறகே என்னால் தவறு நடப்பதை உணர முடிந்தது. அதன் பிறகு அப்படத்தின் இயக்குநர் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டியிருந்தது.
"நான் தயாரிக்கும் படங்களில் ஏன் மற்ற நடிகர்கள் இடம்பெறுவதில்லை என்று கேட்கிறார்கள். மிஷ்கின் போன்றவர்கள் என் முதுகில் குத்தியதால் நான் என் மனதில் போட்டு வைத்து இருந்த பல திட்டங்களை முழுவதும் மாற்றி அமைக்க வேண்டியிருந்தது," என்கிறார் விஷால்.
இந்நிலையில், இவர் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியீடு காண்கிறது. இந்தப் படத்தை சரவணன் இயக்கி உள்ளார்.
"இந்தப் படம் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் சென்றடையும். கிட்டத்தட்ட நான் நடித்த 'பாண்டியநாடு' படம் போல் இருக்கும். இதிலும் நானும் வில்லனும் படத்தின் இறுதிக்காட்சியில்தான் சந்திப்போம். ஒரு படம் வெற்றி அடைவதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளன.
"மூன்று வெவ்வேறு கதைக்களங்கள் நேர்கோட்டில் பயணம் செல்லும் நிலையில், திடீரென ஒரு மையப்புள்ளியில் சந்திக்கின்றன. அதுதான் இந்தப் படத்துக்கான துருப்புச்சீட்டு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டம் குறித்துப் பேசியிருக்கிறோம்," என்கிறார் விஷால்.
அண்மையில் வெளியீடு கண்ட 'அத்ரங்கி ரே' இந்திப் படத்தில் நடித்த டிம்பிள் ஹயாத்தி இந்தப் படத்தின் நாயகி. மேலும், ரவீனா ரவி, மாரிமுத்து, யோகி பாபு, துளசி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, பாபுராஜ் வில்லனாக நடித்துள்ளார்.
"பா.சரவணன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்து அசந்துபோனேன். அவரிடம் நாம் மதிக்க வேண்டிய ஒருவித முதிர்ச்சி இருக்கிறது. திரைப்படம் இயக்க வாய்ப்பு என்றதும் முதலில் பயந்துபோனார். ஆனால், 'வீரமே வாகை சூடும்' படத்துக்கான கதை, திரைக்கதை என அனைத்துடனும் அவர் தயாராக வந்தபோது, மீண்டும் அவரைக் கண்டு வியந்தேன். குறிப்பாக, அவர் திரைக்கதை அமைத்திருந்த விதம் என்னைக் கவர்ந்தது," என்று சொல்லும் விஷால், தயாரிப்பாளராக இருப்பதுதான் தமக்குள் இருக்கும் நடிகனையும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்கிறார்.
கடந்த 17 ஆண்டுகளாக தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருவதே பெரும் சாதனைதான் என்று குறிப்பிடுபவர், இதன் மூலம் தனக்கு ஏற்ற கதைகளைத் தேர்வு செய்யும் சுதந்திரம் கிடைக்கிறது என்கிறார்.
மேலும் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும்கூட, படப்பிடிப்பை நடத்த முடிந்தது என்றால் அதற்கு தாம் தயாரிப்பாளராக இருப்பதே முதன்மை காரணம் என்று கூறுபவர், கடந்த ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் தொடங்கிய 'வீரமே வாகை சூடும்' படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.
'இரும்புத்திரை' படம் வெளியான பிறகு விஷாலின் திரைப்பயணம் மற்றொரு மைல்கல்லை எட்டிப்பிடித்துள்ளது எனலாம்.
இந்தப் படத்தின் வெற்றியானது நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் இவருக்குத் திரையுலகில் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
அறிமுக இயக்குநராக பி.எஸ்.மித்ரன் அந்தப் படத்தில் தனி முத்திரை பதித்திருந்தார். அதன் பிறகு அனுபவ இயக்குநர்களின் இயக்கத்தில் ஒரு படம், பின்னர் ஓர் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு என்று கொள்கை முடிவு எடுத்து நடித்து வருகிறார் விஷால்.
"நானும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவன். கடும் பிரச்சினைகளுக்கு இடையிலும் சினிமா மீதான அவர்களின் காதலும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையும் குறைந்ததே இல்லை. அதனால், சிறந்த படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் இருந்து ஒரு விழுக்காடுகூட பின்வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது எனது திரைப் பயணத்தையும் முன்னெடுத்துச் செல்லும் என்பதுதான் உண்மை," என்கிறார் விஷால்.

