தமிழ்த் திரையுலகத்தில் தினமும் ஒரு புதுமுக நடிகர் அல்லது நடிகை அறிமுகமாகி வருகிறார்கள். அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உறவுப் பெண்ணான ஸ்ரீஷா.
'காதல் எங்கே' என்ற தலைப்பில் வெளியான இசைத்தொகுப்பின் மூலம் இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர்.
தமிழில் 'இரை' என்ற தலைப்பில் தயாராகும் இணையத்தொடரில் ஸ்ரீஷாதான் நாயகி. இது தவிர தலைப்பு வைக்கப்படாத ஒரு தமிழ்ப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர், பின்னர் மேற்படிப்புக்காக பெங்களூருக்குச் செல்ல இருந்த வேளையில், சென்னை கல்லூரியிலேயே இடம் கிடைக்க, பெற்றோர் வெளியூர் போகவேண்டாம் எனக் கூறிவிட்டனர்.
"என் அப்பா ஓய்வுபெற்ற அரசு ஊழியர். அண்ணன் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார். என் அம்மா வழி தாத்தாவும் அத்தை ஸ்ரீதேவியின் அம்மாவும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரி ஆவர். சிறு வயது முதல் ஸ்ரீதேவி அத்தையைப் பார்த்து வளர்ந்ததால் இயல்பாகவே எனக்கும் திரையுலகம், நடிப்பின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது.
"ஸ்ரீதேவி அத்தையின் புகழும் அவரது வளர்ச்சியும் என்னைப் பிரமிக்க வைத்த தருணத்தில்தான் திரைப்பட நடிகையாக வேண்டும் என்று முடிவெடுத்தேன்," என்கிறார் ஸ்ரீஷா.
கல்லூரியில் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பை முடித்தவருக்கு தொலைக்காட்சி, வானொலி, இணையம் என எல்லா தளங்களிலும் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்தும் தெரிந்திருக்கிறது.
"தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டால் நடிப்பதற்கு உதவியாக இருக்கும் என நினைத்துப் படித்தேன். சில வாய்ப்புகள் தேடிவந்தபோது வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஏதும் இல்லை. மேலும், அப்பா, அம்மாவுக்கு நான் நடிகையாக மாறியதில் ஆச்சரியமும் இல்லை. அத்தை பெரிய நடிகை என்பதால், அவர் வழியில் நானும் திரைப்பட நடிகையாவேன் என்று அப்பாவும் ஏற்கெனவே கணித்து வைத்திருந்தாராம்.
"கடந்த 2018ஆம் ஆண்டு 'மிஸ் தமிழ்நாடு' அழகியாக தேர்வு பெற்றதும் என் எதிர்காலத்துக்கான வாசல் திறந்துவிட்டதாக உணர்ந்தேன். எனக்கு மேடையில் சூட்டப்பட்ட அழகிக்கான கிரீடத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து காண்பித்ததும், 'சரி, ஏதோ ஆசைப்படுகிறாய், முயற்சி செய்' என்று திரையுலகத்தில் அறிமுகமாக பெற்றோர் சம்மதித்தனர்," என்று உற்சாகத்துடன் நடந்ததை விவரிக்கிறார் ஸ்ரீஷா.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தன் அத்தை ஸ்ரீதேவியிடமும் இவர் சொல்லி இருக்கிறார். ஆனால் ஸ்ரீதேவியோ, 'முதலில் படிப்பு.... பிறகுதான் நடிப்பு' என்று அறிவுறுத்தினாராம்.
"எனக்கு மட்டுமல்ல, பொதுவாக தன் மகள்கள் உட்பட அனைவருக்குமே அத்தை சொல்லும் அறிவுரை இதுதான். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் படிப்பு நம்மைக் கைவிடாது என்று அடிக்கடி சொல்வார்.
"அவரைத்தான் எனது முன்மாதிரியாகக் கருதுகிறேன். எனவே அவர் சொன்னதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க விரும்பினேன். அதைத்தான் செய்துள்ளேன்," என்கிறார் ஸ்ரீஷா.
திரைப்பட வாய்ப்புகளுக்காக மட்டும் இவர் காத்திருப்பது இல்லை. இணையத்தொடர், காணொளி இசைத்தொகுப்புகள் என மனதுக்குப் பிடித்திருந்தால் எதிலும் நடிக்கத் தயார் என்கிறார்.
ஸ்ரீஷா
, :

