விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள 'எஃப்ஐஆர்' (FIR) படத்துக்கு வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். 'எஃப்ஐஆர்' படமும் அப்படிப்பட்ட படைப்பாகவே உருவாகி உள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். மொத்தம் 22 கோடி ரூபாய்க்கு படத்தின் உரிமை விலை போயிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரு தயாரிப்பாளராக தமக்கு இந்தப் படம் லாபத்தை ஈட்டித் தந்துள்ளதாக விஷ்ணு விஷால் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்துக்கு மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. விஷ்ணுவும்கூட தமது டுவிட்டர் பக்கத்தில் 'மலேசிய, குவைத் ரசிகர்கள்' என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், படத்துக்குத் தடை என்பது தவறான தகவல் என்கிறார் இயக்குநர் மனு ஆனந்த்.
"எங்கள் படத்தை மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யவில்லை. அங்கெல்லாம் இந்தப் படத்தை இன்னும் தணிக்கை செய்யவில்லை.
"ஒருசில வார்த்தைகள் படத்தில் இடம்பெற்றாலே அந்தப் படத்தை அவர்கள் தணிக்கை செய்வதில்லை. இதுபோன்ற நடைமுறைகள் காரணமாகவே குறிப்பிட்ட சில நாடுகளில் படம் இன்னும் வெளியாகவில்லை," என்கிறார் மனு ஆனந்த்.
இப்படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிக்கா, மஞ்சிமா மோகன், ரைசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது 'எஃப்ஐஆர்' படம்.

