மும்பையில் இருந்து கோடம்பாக்கத்துக்கு நம்பிக்கையுடன் வந்திறங்கி உள்ளார் கிரிஷா குருப். ஏற்கெனவே தமிழில் 'ஷ்', 'கிளாப்' ஆகிய இரு படங்களில் நடித்துள்ள போதிலும், தமக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கிரிஷா.
இப்போது வெற்றியுடன் இணைந்து 'ஜோதி' என்ற படத்தில் நடிப்பவர், கொரோனா நெருக்கடி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தமக்கான அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வரும் என நம்புகிறாராம்.
'ஜோதி' படம் தமக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத பல்வேறு அனுபவங்களைத் தந்துள்ளதாகக் குறிப்பிடும் கிரிஷா, முப்பது வயதைக் கடந்தவர் என்றால் நம்ப முடியவில்லை.
'ஜோதி'யில் கதைப்படி புதிதாக திருமணமான இளம்பெண்ணாக நடிக்கிறார் கிரிஷா. படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன்னர், தனது தாயாரிடம் அவருக்குத் திருமணமான புதிதில் எவ்வாறு உணர்ந்தார் என்று கேட்டாராம். ஆனால் அவர் சொன்ன அனுபவங்களில் ஒன்றுகூட இன்றைய இளம் பெண்களுக்குப் பொருந்தாது என்று சிரிக்கிறார். கிரிஷாவைப் பார்த்தால் கல்லூரி மாணவிபோல் தோன்றுகிறது.
அன்பர் தினத்தையொட்டி அண்மையில் அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"திரையுலகிலும் அதற்கு வெளியேயும் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். 'ஜோதி' படப்படிப்புக்காக நெய்வேலி சென்றிருந்தோம். அங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் வெப்பத்தை உணர முடிகிறது. ஆனால் அதைவிட, அம்மக்களின் பாசம் அனைத்தையும் கடந்து நம்மை நெகிழ வைக்கிறது.
"சின்னச் சின்னச் செய்கைகளின் மூலமாகக் கூட காதலையும் அன்பையும் நம்மால் பகிர முடியும். நெய்வேலி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தபோது இந்த உண்மை எனக்குப் புரிந்தது. ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவது, நாளேடு படிப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது என்று பல வகைகளில் காதலை வெளிப்படுத்தவும் பகிரவும் முடியும்.
"ஆனால் பரபரப்பான வாழ்க்கையில் இதை செய்ய மறக்கிறோம் என்பது மட்டுமல்ல, இப்படி வாழ்பவர்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். என்னைப் பொறுத்தவரை மனமொத்த இருவர், அன்பையும் காதலையும் பரிமாறிக்கொள்ள விரும்புகிறவர்கள், தாங்கள் இணைந்திருக்கும் சில நொடிகள் கூட வாழ்க்கையின் பொக்கிஷம் என்பதையும் அதுவே உண்மையான காதல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார் கிரிஷா.

