உடல் எடையைக் குறைப்பதற்காக சிம்பு மேற்கொண்ட தீவிர முயற்சிகள் குறித்து அவரது உடற்பயிற்சியாளர் சந்தீப் ராஜ் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சிம்புவை பாராட்டித் தள்ளுகிறார்கள்.
வெறும் உடற்பயிற்சியுடன் நிற்காமல், பரதநாட்டியமும் கற்றுக் கொண்டாராம் சிம்பு.
உடல் பெருத்து, 105 கிலோ எடையுடன் வலம் வந்த சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. கிடைத்த வாய்ப்புகளும் அவருக்கு வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் நண்பரும் நடிகருமான மகத் மூலமாக சந்தீப் ராஜ் குறித்து சிம்புவுக்கு தெரியவந்தது.
"முதன்முதலாக அவரை (சிம்பு) சந்தித்தபோது உடல் பெருத்துவிட்டதைச் சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். அதன் பிறகு பயிற்சியைத் தொடங்கியதும் அவரது வேகம் எனக்கு வியப்பளித்தது.
"இப்படித்தான் செய்ய வேண்டும் என்று ஒருமுறை சொன்னால் போதும், அதை சரியாகப் பின்பற்றுவார். 33 கிலோ எடை குறைப்பது என்பது எளிதான ஒன்றல்ல. இதற்காக தாங்க முடியாத வலியைப் பொறுத்துக் கொண்டார் சிம்பு," என்கிறார் சந்தீப் ராஜ்.
முதற்கட்டமாக எட்டு கிலோ எடையைக் குறைக்க முடிந்ததாம். தீவிர உடற் பயிற்சி செய்யும்போது புகைப்பிடிக்கக் கூடாது என்றும் மேலும் சில கட்டுப்பாடுகளும் உள்ளன என்றும் குறிப்பிடும் சந்தீ்ப், அவற்றை எல்லாம் சிம்பு ஒருமுறைகூட மீறியதே கிடையாது என்கிறார். 'கூடாது என்றால் கூடாதுதான்' என்ற கொள்கையை அவர் கடைசி வரை கடைப்பிடித்தார் என்றும் பாராட்டுகிறார்.
"உடல் எடை 85 கிலோவாகக் குறைந்த பின்னர், நீச்சல், கூடைப்பந்து, பேட்மின்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டார். இப்போது 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்புவின் உடல் எடை 72. ஏதோ ஒரு படத்துக்காக அவர் இவ்வாறு எடையைக் குறைக்கவில்லை. தனது அன்றாட வாழ்க்கை முறையை மாற்றிஅமைக்க விரும்பினார் சிம்பு.
"ரசிகர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதால்தான் இந்த ஒட்டுமொத்த எடை குறைப்பு படலத்தையும் காணொளியாக வெளியிட்டார். அதற்கு 'ஆத்மன்' என்று தலைப்பு வைத்ததும் அவர்தான். எதுவாக இருந்தாலும் அது நம் ஆத்மாவுடன் தொடர்புடையது என சிம்பு நம்புகிறார்," என்கிறார் சந்தீப் ராஜ்.
இதற்கிடையே, நடிகை சரண்யா மோகனிடம் பரத நாட்டியப் பயிற்சியும் பெற்றுள்ளார் சிம்பு. கடந்த 2020ஆம் ஆண்டு கேரளாவுக்குச் சென்றபோது பல் மருத்துவரான சரண்யா மோகனின் கணவரைச் சந்தித்துள்ளார் சிம்பு.
அப்போது கணவரைப் பார்க்க வந்த சரண்யாவைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியம். பிறகு பரதம் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் நல்ல ஆசிரியரை அறிமுகம் செய்யும்படியும் சிம்பு கேட்டுக்கொள்ள, தாமே கற்றுத் தருவதாகக் கூறினாராம் சரண்யா. பிறகு இரண்டு வாரங்களுக்கு அவர் நடனப் பயிற்சி பெற்றுள்ளார்.

