முழு நீள அடிதடிப் படமாக உருவாகி வருகிறது ஜெயம் ரவியின் 'அகிலன்'.
கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். 'பூலோகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். காலஞ்சென்ற இயக்குநர் ஜனநாதனிடம் உதவியாளராக இருந்து தொழில் கற்றவர்.
"இது நிழல் உலக ரவுடிக் கூட்டத்தைப் பற்றிய கதை. அந்தக் குழுவில் ஒருவராக, அகிலன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
"நிழல் உலக ரவுடிகள் இப்படித்தான் இருப்பார்கள் என நாம் கற்பனை செய்திருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் ஓர் அரசாங்கம் போன்று செயல்படக்கூடியவர்கள். ஒருவரின் பயம்தான் இந்த ரவுடிகளின் பலம்.
"இப்போதெல்லாம் பணத்துக்காக கொலை செய்வதை பெரிய சாதனை என்று சிலர் கருதுகிறார்கள். அதேசமயம் இந்த நிழல் உலக ரவுடிகளிடம் உள்ள நாகரிகம், ஒழுக்கம், விசுவாசம், அறிவாற்றல் ஆகியவற்றைக் கேள்விப்படும்போது வியப்பாக இருக்கிறது.
"பேராண்மை' படத்தில் தொடங்கி இப்போது அவருடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். மிக அருமையான மனிதர். என்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். 'பூலோகம்' படம் வெற்றி பெற்றாலும்கூட எனக்கான வாய்ப்புகள் அமையவில்லை. எந்தத் தயாரிப்பாளரும் என்னைத் தேடிவரவில்லை. ஆனால் ஜெயம் ரவி என்னை மீண்டும் நம்பியது அவருடைய பெருந்தன்மை.
"இந்தப் படத்தில் பல ஆபத்தான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கப்பல் மீது ஏறவேண்டும், கொள்கலன்கள் மீது வேகமாக ஓட வேண்டும், கிரேன்கள் மீது விறுவிறுவென ஏறிச்சென்று எதிரியுடன் மோத வேண்டும், பல அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்கவேண்டும் என வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம்.
"ஆனால் ஜெயம் ரவி அனைத்திலும் தயக்கம் இன்றி துணிச்சலுடன் நடித்தார்.
"அகில் கதாபாத்திரத்துடன் அவர் நூறு விழுக்காடு பொருந்திப் போனார். கதைப்படி, தனது உண்மையான உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவன் அகிலன். அவன் தன் மனதுக்குள் என்ன நினைக்கிறான் என்பது யாருக்குமே தெரியாது.
"அவனது அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாமே பொய். அவன் யாருக்காக அனைத்தையும் செய்கிறான், யாருக்கு உண்மையாக இருக்கிறான் என்பதுதான் கதையின் மையம்," என்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.
'அகிலன்' படத்தின் முதன்மை நாயகி பிரியா பவானி சங்கர். தன்யா ரவிச்சந்திரன் மற்றொரு நாயகி. பிரியா பவானி சங்கர் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தை நகர்த்திச் சொல்லும் கதாபாத்திரமாம்.
"குறிப்பிட்ட ஒரு காட்சியில் புல்லட் ஓட்டவேண்டும் என்று அவரிடம் சொல்லி இருந்தேன். அடுத்த சில தினங்களிலேயே படப்பிடிப்புக்குப் புல்லட்டில் வந்து இறங்கி அசத்தினார்.
"தன்யாவும் தனது பங்களிப்பை கச்சிதமாக வழங்கி உள்ளார். அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் தனித்துவமானது. அந்த வேடத்தில் வேறு யாராவது இந்தளவு சிறப்பாக நடித்திருக்க முடியுமா என்ற சந்தேகம் இப்போதும் உள்ளது. அவர் மிகுந்த திறமைசாலி.
"இந்தப் படத்தில் ஐந்து வில்லன்கள் உள்ளனர். ஹரிஷ் உத்தமன், ஹரிஸ் பெராடி, சிராக் ஜானி, தமிழ் ஆகியோர் நிழல் உலகத்துக்கு தங்கள் நடிப்பால் உயிர் கொடுத்துள்ளனர்.
"படத்தின் பெரும்பாலான காட்சிகள் துறைமுகப் பகுதிகளில்தான் படமாக்கப்பட்டுள்ளன. நான் ஒரு பக்கம், என் உதவியாளர்கள் இன்னொரு பக்கம், நடிகர்கள் வேறொரு பக்கம் என்று அனைவரும் தனித்தனியாக நின்று உழைத்தோம்.
"மிகவும் சிரமப்பட்டு எடுத்த காட்சிகள் ரசிகர்களின் கைத்தட்டலை பெறும் என உறுதியாக நம்புகிறோம். ஜெயம் ரவி என் மீது வைத்துள்ள நம்பிக்கை சரியானது என்பதை நிரூபிக்கவும் இந்த நம்பிக்கையை நீட்டிக்கவும் ரசிகர்களின் கைத்தட்டல்கள் மிக அவசியம்," என்கிறார் கல்யாண கிருஷ்ணன்.
ஜெயம் ரவி