'குதிரைவால்' என்ற வித்தியாசமான தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இரட்டை இயக்குநர்கள் மனோஜ், ஷியாம் இயக்குகின்றனர்.
படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பில் நாயகன் கலையரசனுக்கு வால் முளைப்பதுபோல் காண்பித்துள்ளனர். இதனால் ரசிகர்களின் படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
"இது மனித உணர்வுகளையும் மதிப்பீடுகளையும் பற்றிப் பேசும் படம். திரையில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்த பின்னர் 'இது நம் முடைய வாழ்க்கையில் நடந்ததுபோல் இருக்கிறதே' என ரசிகர்கள் நிச்சயம் நினைத்துக்கொள்வார்கள்.
"எங்களுடைய நண்பர் ராஜேஷ் என்பவர்தான் இந்தக் கதையைக் கொண்டு வந்தார். சவால் நிறைந்த கதைக்களம். ஆனால், கச்சிதமாக படமாக்கப்பட்டால் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக மாறும் என்று தோன்றியது.
"இதற்கு முன்பு சில குறும்படங்களை உருவாக்கி உள்ளோம். அவற்றைப் பார்த்த பிறகுதான் இயக்குநர் ரஞ்சித் எங்களுக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார்," என்கிறார் மனோஜ்.
"வங்கியில் வேலை செய்யும் ஒருவனுக்குத் திடீரென்று வால் முளைத்துவிடுகிறது.
"அது அவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதுதான் கதை.
"நாயகன் கலையரசன் கடும் உழைப்பைக் கொட்டியுள்ளார். வால் முளைத்த மனிதனாக நடிக்கும்போது அதற்கேற்ற உடல்மொழி தேவைப்படும். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு அருமையாக நடித்துள்ளார் கலையரசன்.

