பிரியா ஆனந்த் திரையுலகில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும்கூட கதாநாயகியாக மட்டுமே நடித்து வருவதை பெருமைக்குரிய விஷயமாகக் கருதுவதாகச் சொல்கிறார் பிரியா.
இந்நிலையில், பிரசாந்த் ஜோடியாக இவர் நடித்துள்ள 'அந்தகன்' ('அந்தாகூன்' இந்தித் திரைப் படத்தின் மறுபதிப்பு) திரைப்படம் விரைவில் திரைகாண உள்ளது. மேலும், 'காசேதான் கடவுளடா' படத்தின் மறுபதிப்பிலும் நடித்து வருகிறார்.
தொடர்ந்து நாயகியாக மட்டுமே நடித்து வருவதன் ரகசியம் என்ன என்று ரசிகர்கள் அவ்வப்போது கேட்கிறார்களாம். இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்கிறார்.
"எனக்கான பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்கிறேன். தேடி வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று யாரையும் தேடிச் சென்றதும் இல்லை.
"என் அழகு ரகசியம் என்னவென்றும் சிலர் கேட்கிறார்கள். அதற்காக நான் மெனக்கெடுவது இல்லை. என்னுடைய பாட்டி சத்தான உணவு வகைகளைச் சமைத்துக் கொடுக்கிறார். ஒருவேளை இது ஒரு காரணமாக இருக்கலாம். கதாநாயகர்கள் எப்போதுமே உடல்நலனில் கவனம் செலுத்துவார்கள். நல்ல சம்பளம், கை நிறைய வாய்ப்புகள் இருப்பதால் மனதளவில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். கதாநாயகிகளும் இதைப் பின்பற்றினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
"திருமணம் ஆகிவிட்டால் நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கிவிடுவார்கள் என்பதெல்லாம் பழங் கதை. திறமை உள்ள நடிகைகளுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும்," என்று சொல்லும் பிரியா, தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு கோடம்பாக்கத்தினர் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்கிறார்.
தமிழ்ப் பெண்கள் சிறப்பாக நடிப்பதாகக் குறிப்பிடுபவர், வட இந்தியாவில் இருந்து கதாநாயகிகளை இறக்குமதி செய்யும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
"அழகான தமிழ்ப் பெண்கள் பலர் தமிழ்ப் படங்களில் நடிக்க காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றளவும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் புது நாயகிகளை வடஇந்தியாவில்தான் தேடுகிறார்கள். இதை முதலில் நிறுத்தவேண்டும். தமிழ்ப் பெண்களை மதிக்க வேண்டும்," என்று கோபத்தை வெளிப்படுத்துகிறார் பிரியா.
'அந்தகன்' படம் தமிழ் ரசிகர்களால் நிச்சயம் கொண்டாடப்படும் என்று குறிப்பிடுபவர், தமக்கும் பிரசாந்துக்கும் இப்படம் நல்ல திருப்புமுனையாக அமையும் என்கிறார்.
"அந்தகன்' படத்தின் கதைதான் அதன் பலம். ஏற்கெனவே இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
"தமிழில் பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படத்தின் இயக்குநர் தியாகராஜன் உறுதியாக உள்ளார். யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்ற சூட்சமத்தை நன்கு அறிந்தவர் அவர். அதனால் படத்தில் நடிக்கும் அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு நடித்தோம். கதைப்படி நானும் பிரசாந்தும் காத லர்களாக நடிக்கிறோம்," என்கிறார் பிரியா.
இந்தப் படத்தில் கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, மனோபாலா, கேஎஸ் ரவிகுமார், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளார் இயக்குநர். அதனால் படப்பிடிப்பு என்பது ஒரு திருவிழாவைப் போல் நடந்ததாம்.
"பிரசாந்தைப் பொறுத்தவரை அவர் இப்போது காதல் நாயகன்தான். அவர் என்றுமே இளமை யாகத்தான் இருப்பார் போலிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'கண்ணெதிரே தோன்றினாள்' படத்தில் பார்த்த மாதிரியே இப்போதும் இருக்கிறார். 'அந்தகன்' படம் வெளியான பிறகு மீண்டும் ஒரு வெற்றிவலம் வருவார் என நம்புகிறேன்.
"மொத்த படத்தையும் முடித்த பிறகு ஒருநாள் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பார்த்தோம். உண்மையாகவே நான் மிரண்டு போனேன். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான படைப்பாக உருவாக்கி உள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்," என்று சொல்லும் பிரியா, அடுத்து மிர்ச்சி சிவா ஜோடியாக நடிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியான 'காசேதான் கடவுளடா' படத்தின் மறுபதிப்பில் சிவாதான் நாயகன். அவருடன் இணைந்து நடிப்பது சுவாரசியமான அனு பவத்தை தரும் என்கிறார்.
"சிவாவும் நானும் கோடம்பாக்கத்தில் வெற்றி ஜோடியாக கருதப்படுகிறோம். அவருடன் 'வணக்கம் சென்னை', 'சுமோ' ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அவரது நேர்த்தியான, அலட்டிக் கொள்ளாத, ஆபாசமில்லா நகைச்சுவைக்கு நானும் ஒரு ரசிகை," என்கிறார் பிரியா ஆனந்த்.

