'காந்தாரி' என்ற தலைப்பில் உருவாகும் ஓர் இசைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு அசத்தலாக நடனமாடி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
இந்தப் பாடலுக்கான முதல்தோற்றச் சுவரொட்டி அண்மையில் வெளியானது. அதைக் கண்ட கீர்த்தியின் நண்பர்கள், ஏதேனும் திரைப்படத்தில் இந்தப் பாடல் இடம்பெறுகிறதா என்று விசாரித்தார்களாம்.
இப்பாடலுக்கு பவன் இசைஅமைக்க, பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.
"முதன்முறையாக ஒரு நாட்டுப்புறப் பாடலுக்கு நடனமாடி உள்ளேன். இதுபோன்ற பாடலுக்கு நடனமாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
"எனது நடனத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். பிருந்தா மாஸ்டர்தான் எனது முதல் நடன ஆசிரியை. எனக்கு எந்த வகை நடனம் ஒத்துவரும் என்பதை நன்கு அறிந்தவர் அவர்.
"அவருடன் இணைந்து பணியாற்றும்போது நம்மிடம் உள்ள திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வருவார். அவருடன் இணைந்து பணியாற்றுவது இனிய அனுபவமாக இருக்கும்.
"திரைப்படத்துக்காக ஒரு பாடலை எப்படிப் படமாக்குவார்களோ, அப்படித்தான் 'காந்தாரி' பாடலும் படமாக்கப்பட்டது.
"இதுபோன்ற வாய்ப்புகள் அதிக உற்சாகம் தரும்," என்கிறார் கீர்த்தி.

