பேட்மிண்டன் வீரரான தமது தந்தை பிரகாஷ் படுகோனேவின் வாழ்க்கையைப் திரைப்படமாக எடுக்கப் போவதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
கடந்த 1981ஆம் ஆண்டு பேட்மிண்டனில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் பிரகாஷ் படுகோனே. அதன் பின்னர் மேலும் பல பட்டங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
"1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று சாதித்தது. அதை பெரிய அளவில் கொண்டாடினர். ஆனால் அதற்கும் முன்பாகவே உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியவர் என் தந்தை. பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியா சிகரம் தொட உதவியவர். இ்பபோது விளையாட்டு வீரர்களுக்கு உள்ளது போன்ற வசதிகள் அப்போது கிடையாது.
"திருமண மண்டபங்களை பேட்மிண்டன் அரங்காக மாற்றி பயிற்சி மேற்கொண்டார் என் தந்தை. அவரைப் பற்றி இன்றைய இளையர்களுக்கு அதிகம் தெரியாது. எனவேதான் அவரது வாழ்க்கையைப் படமாக்க முடிவு செய்தேன் என்கிறார் தீபிகா.
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த வகையில் தாம் உருவாக்க உள்ள புதிய படமும் முத்திரை பதிக்கும் என்று கூறியுள்ளார்.
"என் தந்தையைப் போன்ற சாதனையாளர்கள் குறித்து இளைய சமுதாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். நாட்டின் பெருமைக்குரிய அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வது நமது கடமை. அவரைப் போன்றவர்களை நாடு கொண்டாட வேண்டும்," என்கிறார் தீபிகா.

