பழம்பெரும் மலையாள நடிகை லலிதா உடல்நலக்குறைவால் கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 73.
மலையாளத்தில் மட்டுமல்லாமல் ஏராளமான தமிழ்ப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் லலிதா.
கடந்த 1969ம் ஆண்டு கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் வெளியான 'கூட்டுக்குடும்பம்' படத்தின் மூலம் திரைஉலகில் அறிமுகமான இவர், மலையாளம், தமிழ் என மொத்தம் 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'காதலுக்கு மரியாதை', 'பரமசிவன்', 'கிரீடம்', 'அலைபாயுதே', 'மாமனிதன்', 'காற்று வெளியிடை' உள்ளிட்ட பல படங்களில் லலிதாவை நல்ல கதாபாத்திரங்களில் காண முடியும். பிரபல இயக்குநர் பரதனை திருமணம் செய்து கொண்ட லலிதா, இரண்டு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
கேரள அரசு திரையுலகத்திற்கு இவர் அளித்த பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் கடந்த 2016ம் ஆண்டு 'கேரள சங்கீத நாடக அகாடமி'யின் தலைவராக நியமித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லலிதாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அண்மையில் உடல்நலம் தேறியதை அடுத்து தன் மகன் வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென காலமானார்.
நடிகை லலிதாவின் மறைவுக்கு மலையாள திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால்ஆகியோர் லலிதாவின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவரது கலைச்சேவை என்றும் நினைவுகூரப்படும் என கூறியுள்ளனர். மறைந்த லலிதாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நேற்று நடைபெற்றது.

