'மழை பிடிக்காத மனிதன்' என்ற வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கி உள்ளார் இயக்குநர் விஜய் மில்டன். தலைப்புக்கேற்ப கதையும் வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார்.
விஜய் ஆண்டனிதான் இந்தப்படத்தின் கதாநாயகன். அவரும் இயக்குநரும் பதினைந்து ஆண்டுகால நண்பர்கள். எனினும் திரையுலகில் நுழைந்ததும் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்த பின்னர் இப்போது கூட்டணி அமைத்துள்ளனர்.
"மனசுக்கு நெருக்கமான இந்தக் கதையுடன் சில காலம் அலைந்து கொண்டே இருந்தேன். நீங்கள் விவசாயியா, மண்பாண்டம் செய்கிறவரா, உங்கள் வியாபாரம் குடை விற்பதா, உப்பு விற்பதா என்பதைப் பொறுத்துதான் உங்களுக்கு மழை பிடிக்குமா, பிடிக்காதா என்பது தெரியும்.
"ஆனால் மழைக்கு இது எதுவுமே தெரியாது. அது தன் போக்கிலேயேதான் இருக்கும். மழை பிடிக்காதவர்களும் இருப்பார்களா என்ற கேள்விக்குறி இந்தத் தலைப்பில் இருக்கிறது.
"எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு விஷயம், ஒருத்தனுக்குப் பிடிக்காமல் போகும் என்றால் அவனுக்கு என்னவெல்லாம் நடந்திருக்கும் என்று யோசிக்க வேண்டியிருக்கும்.
"இந்த மழை என்னென்ன நினைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும், அவை நம்மை என்னவெல்லாம் செய்யும் என்று நிறைய கேள்விகளும் உள்ளன," என்கிறார் விஜய் மில்டன்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியை சந்தித்தபோது அவரிடம் இந்தக் கதையைச் சொல்லி இருக்கிறார் விஜய் மில்டன். அது பிடித்துப்போகவே உடனடியாக பட வேலைகளைத் தொடங்கச் சொல்லிவிட்டாரம் ஆண்டனி.
"இந்தப் படத்தில் கதைப்படி இறுக்கமும் கோபமும் உள்ள மனிதராக திரையில் தோன்றுவார். இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் ஆண்டனியால் நிறைய மாற்றங்களை நடிப்பில் கொண்டு வர முடிகிறது.
"இவர் நிச்சயமாக பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான ஆண்டனி இல்லை. இது அதிரடி சண்டைகள் நிறைந்த படம்தான். ஒரு மனிதனின் மனசைத் தோண்டினால் அதில் மகிழ்ச்சியும் துக்கமும் கொப்பளிக்கலாம்.
"ஆனால் சில சமயங்களில் திராவகம் ஓடும் சூழ்நிலைகளும் உள்ளன. அதையும் நாம் அறிவோம். அப்படிப்பட்ட இடங்களிலும் அருமையாக நடித்துள்ளார் ஆண்டனி. அவர் அமைதியாக வந்து நிற்பார். களத்தில் இறங்கிவிட்டால் அவரிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகள் அசர வைக்கும்.
"அனைத்தையும்விட அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை இந்தப் படத்தின் வெற்றிக்கு தூண்டுகோலாக இருக்கிறது," என்று சொல்லும் விஜய் மில்டன், படத்தின் நாயகி மேகா ஆகாஷையும் பாராட்ட மறக்கவில்லை.
மேகாவுக்கு ஏற்ற அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுபவர், கதையைக் கேட்ட உடனேயே பிரியத்தோடு நடிக்க ஒப்புக் கொண்டதாகச் சொல்கிறார்.
"நான் சொன்ன கதை மீது அவருக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. இது எளிய மனிதர்களின் கதைதான்.
"நாம் தேடிக்கொள்ளும் வாழ்க்கை, வந்து சேர்கிற காதல், செய்த தவறு, அதனால் கிடைக்கிற வேதனை என்று நம் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
"அப்படிப் புரட்டிப் போட்ட வாழ்க்கையில் பொருந்துகிற கதாபாத்திரத்தில் வருகிறார். மேகாவிடம் உள்ள திறமைக்கு அவர் இந்நேரம் பல உயரங்களைத் தொட்டிருக்க வேண்டும். இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்படும்.
"இயல்பாக நடிக்கக்கூடிய கதாநாயகிகள் கிடைப்பது அரிது. மேகாவை அந்தப் பட்டியலில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்.
"தங்கை வேடத்தில் நடித்துள்ள பிரணதி, அம்மாவாக வரும் சரண்யா என அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்.
"பெரும் பொருள்செலவில் தயாரித்த தனஞ்செயன், கமல் போரா, பிரதீப் இவர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன்," என்கிறார் விஜய் மில்டன்.
படம் சிறப்பாக உருவாகி உள்ளதாக விஜய் ஆண்டனி பாராட்டியது இயக்குநருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருப்பதாகத் தகவல்.

