இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள சுமார் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேற்று அதிகாலை வெளியானது அஜித்தின் 'வலிமை' திரைப்படம்.
சென்னையில் வழக்கம்போல் திரையரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள அஜித்தின் பிரம்மாண்ட பதாகைகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து படத்தை வரவேற்றனர்.
நடிகர்கள் அருண் விஜய், பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்ததாகத் தகவல்.
திரையரங்கில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திரையரங்க நுழைவுச் சீட்டைப் பெற்றுச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை ஈட்டித்தரும் என்று தகவல்கள் வெளியான நிலையில், அஜித்தை சந்தித்தாராம் இயக்குநர் வினோத். அப்போது, "இந்த வரவேற்பு என்னவிதமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன," என்று கேட்டுள்ளார்.
அதற்கு, "இதுவும் கடந்து போகும். நம்மைச் சுற்றி நடக்கும் எதுவுமே நிரந்தரம் அல்ல. நல்லதும் சரி, கெட்டதும் சரி.. எதுவும் நிரந்தரமில்லை என்ற நினைப்புடன் வாழத் தொடங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்," என்று அஜித் தத்துவார்த்தமாக அளித்த பதிலைக் கேட்டு தாம் அசந்து போனதாகச் சொல்கிறார் இயக்குநர் வினோத்.

