நடிகை ஷ்ருதி ஹாசனையும் தம்மையும் இணைத்தது இசைதான் என்று அவரது காதலர் சாந்தனு ஹசாரிகா கூறியுள்ளார்.
நடிகை என்பதை மீறி ஷ்ருதி நல்ல இசைக்கலைஞர் என்றும் தங்களின் திருமணம் குறித்தும் அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். மேலும் இசை, ஆடை வடிவமைத்தல் பணிகளில் இணைந்து செயல்படுகிறோம்.
"இந்த உறவு ஆக்கபூர்வமாக நீடித்து வருகிறது. எங்கள் படைப்புகள் குறித்து ஆலோசிக்கத் தவறுவதில்லை.
"இது எங்களை ஊக்குவிப்பதுடன், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவும் உதவுகிறது. இதுதான் இருவருக்கும் இடையே உள்ள உறவின் நிலை. திருமணத்தைவிட இதில்தான் எங்களது கவனம் குவிந்துள்ளது.
"எனக்கும் இசையில் அதிக நாட்டம் உண்டு. இசைதான் எங்கள் இருவரையும் இணைத்தது எனலாம். எனவே இசை சார்ந்த பணிகளில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி தருகிறது," என சாந்தனு தெரிவித்துள்ளார்.
தற்போது இருவரும் பொது இடங்களில் ஒன்றாக சுற்றித் திரிவதைக் காண முடிகிறது. அதேசமயம் தனது புதிய இசைத்தொகுப்புக்காக ஷ்ருதி தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசாத ஷ்ருதி, மிக விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாந்தனுவிடம் ஷ்ருதியின் ரசிகர்கள் சிலர், திருமணம் குறித்து கேட்டதற்கு அவர் வெளிப்படையாகப் பதில் அளித்துள்ளார்.
தற்போது தெலுங்குப் படம் ஒன்றில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார் ஷ்ருதி.
அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் திருமணம் தொடர்பாகவும் பேச விரும்பவில்லை என்று ஷ்ருதி திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதையடுத்து ஊடகங்களின் பார்வை சாந்தனு பக்கம் திரும்பியுள்ளது.
விரைவில் கமல் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கக்கூடும் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

