ஒன்பது வயதில் தாம் கண்ட கனவு இப்போது நனவாகி உள்ளதாகச் சொல்கிறார் இளம் நாயகி ஆலியா பட். இவர் நடித்துள்ள 'கங்குபாய் கத்தியாவடி' இந்திப் படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள போதிலும், இந்தப் படம் ஆலியாவுக்கு பல்வேறு விருதுகளைப் பெற்றுத் தரும் என்கிற பேச்சும் உள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்கி உள்ளார். அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது, அதுவும் சிறிய வேடத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பதுதான் ஆலியாவின் சிறு வயதுக் கனவாம்.
"எனக்கான வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையுடன் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். கடந்த 2005ஆம் ஆண்டு திடீரென அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. புதுப்படத்துக்கான நாயகியை அவர் தேடிக் கொண்டிருப்பதை அறிந்தேன்.
"ஆனால் நடிப்புத் தேர்வு, ஒப்பனைப் பொருத்தம் என்று பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு அவரது கதாபாத்திரத்துடன் நான் பொருந்திப்போகவில்லை என்று கூறிவிட்டார். எனினும் என் கண்களை உற்று நோக்கியவர், 'நீ வருங்காலத்தில் நாயகியாக நடிப்பாய். இவை கதாநாயகிக்குரிய கண்கள்' என்று அவர் சொன்னதும் அப்போது மனதில் ஏற்பட்ட ஏமாற்றமும் சோகமும் ஒரே நொடியில் பறந்துபோனது," என்கிறார் ஆலியா பட்.
மும்பையைச் சேர்ந்த கங்குபாய் என்ற பெண்மணியின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி உள்ளது. அவரது வாழ்க்கையைக் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கங்குபாய் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் இவை எல்லாம் ஆலியாவை கொஞ்சம்கூட அசைத்துப் பார்க்கவில்லை.
"கனமான கதாபாத்திரத்தில் நம்மால் நடிக்க முடியுமா என்ற கவலை எனக்கு இருந்தது. இதுகுறித்து சஞ்சய் லீலா பன்சாலி சாரிடம் மனம்விட்டுப் பேசினேன்.
"அவர் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். உன்னால் முடியும் என்று அவர் அளித்த ஊக்கம்தான் என்னை நடிக்க வைத்தது.
"கங்குபாயின் இளம் வயது, முதுமை என இரு காலகட்டங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் எனது குரல் சற்று கனமாக இருக்க வேண்டும் என்றும் உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
"குரலை மாற்றிப் பேசுவதற்கு மட்டும் சிறப்புப் பயிற்சி பெற்றேன். உடல் எடையைக் கூட்டுவதற்காக உணவுக்கட்டுப்பாடு எல்லாம் தேவை இல்லை. விருப்பம்போல் சாப்பிட்டு, படப்பிடிப்பில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டால் போதும், மற்ற அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.
"நான் எப்போதுமே ஏதாவது ஒன்றை கற்பனை செய்தவண்ணம் இருப்பேன். சில வார்த்தைகளைக் கொடுத்தால் போதும். அவற்றை வைத்து மனதளவில் ஒரு காட்சியை உருவாக்கி, அதில் நடித்துப் பார்ப்பேன்.
"கங்குபாயுடன் தொடர்புடைய சம்பவங்கள் கடந்த 1950களில் நடந்தவை. அதை மனதளவில் கற்பனை செய்து வசனங்களைப் பேசி நடித்தேன். இதுவரை அப்பாவியான, இளமை துள்ளும் கலகலப்பான பெண்ணாக மட்டுமே திரையில் என்னைக் கண்ட ரசிகர்களுக்கு 'கங்குபாய்' படம் நிச்சயம் மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்," என்று படபடவென விவரங்களை கொட்டுகிறார் ஆலியா பட்.
கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்றும் இத்தகைய பாத்திரத்தில் நடிக்கும்போது தாம் அதை காதலிக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்பவர், தாம் அப்படித்தான் செய்ததாகக் கூறுகிறார்.
"பல மாதங்களுக்கு நான் கங்குபாயாகவே மாறிப்போனேன். அவரைப்போலவே பேசி, சிரித்து, அமர்ந்து, நடந்து என்று முழு ஈடுபாட்டுடன் இருந்ததால், என் வீட்டில் இருந்தவர்களே என்னைப் பார்த்து மிரண்டு போயினர்," என்றார் ஆலியா.
ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்தது தென் இந்திய சினிமாவில் தமக்கு நல்ல தொடக்கமாக அமையும் என்று சொல்பவர், தமிழ், தெலுங்குப் படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.
கடந்த 1960களில், மும்பையில் உள்ள காமத்திபுரத்தில் வாழ்ந்தவர் கங்குபாய்.
'பெண் தாதா' என்று ஊடகங்களால் குறிப்பிடப்படும் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

