இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் தம்மால் கதாநாயகியாக மட்டுமே நடிக்க முடியும் என்று கறாராகச் சொல்கிறார் சினேகா.
தாம் இன்னும்கூட வசீகரமாகவும் அழகாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது அழகுச் சிரிப்பும் இன்னும் மாறவில்லை என்கிறார்.
"கதாநாயகியாக மட்டுமே நடிப்பது என்பது எனது விருப்பம். இதில் குறைகாண ஒன்றும் இல்லை. வாய்ப்பு இல்லை என்றால் வீட்டில் சும்மா இருப்பேன்," என்று சொல்லும் சினேகாவின் பேச்சில் உறுதி தெரிகிறது.
இவர் இப்படி என்றால் முன்னாள் நாயகி பூமிகாவின் முடிவு இதற்கு நேர்மாறாக உள்ளது.
கதாநாயகியாக நடித்தவர் இப்போது நாயகியின் அம்மாவாக நடிக்க முன்வந்துள்ளார்.
மலையாளத்தில் தயாராகும் 'பட்டர்ஃபிளை' என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் பூமிகா. விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக வந்தவர், தற்போது இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
"தாய், மகள் பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. எனவே இப்படிப்பட்ட கதையில் நடிப்பதற்கு தயங்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவும் நாயகிக்கு இணையான கதாபாத்திரம்தான்," என்கிறார் பூமிகா.
இதற்கிடையே, 'அழகி' பட நாயகி நந்திதா தாஸ் புதுப்படம் ஒன்றில் புரட்சிகர ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை தங்கர்பச்சான் இயக்குகிறார்.

